2026 ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெற உள்ளது.
பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் முதலாவது தேர்வை அனைத்து மாணவர்களும் கட்டாயமாக எழுத வேண்டும். அதே சமயம், இரண்டாவது பொதுத் தேர்வை விருப்பமுள்ளவர்கள் மட்டும் எழுதிக் கொள்ளலாம். தோல்வி அடைந்தவர்கள் அல்லது குறிப்பிட்ட பாடங்களில் தங்களது மதிப்பெண்ணை உயர்த்த விரும்புபவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம்.
ஒரு மாணவர் இரண்டாவது பொதுத் தேர்வில் அதிகபட்சம் மூன்று பாடங்கள் வரை எழுதலாம். இதில், எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதையே இறுதி மதிப்பெண் என கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இந்நிலையில், பத்தாம் வகுப்புக்கான இரண்டாவது கட்ட பொதுத் தேர்வு மே 15ஆம் தேதி தொடங்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு மே 21ஆம் தேதி வரை நடைபெறும்.
மே 15ஆம் தேதி கணிதத் தேர்வு, மே 16ஆம் தேதி ஆங்கில மொழித் தேர்வு, மே 18ஆம் தேதி அறிவியல் தேர்வு நடைபெறும். மே 19ஆம் தேதி பல்வேறு மொழிகள், இல்ல அறிவியல், ஹிந்துஸ்தானி இசை, சில்லறை வர்த்தகம் மற்றும் சுற்றுலா அறிமுகம் போன்ற பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும்.
அதைத் தொடர்ந்து, மே 20ஆம் தேதி ஓவியம், சமஸ்கிருதம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும். இறுதியாக, மே 21ஆம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வுடன் பொதுத் தேர்வுகள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
