திமுக ஆட்சியில் போலீஸ் காவலில் இறந்ததாக கூறப்படும் 24 பேரின் குடும்பத்தினரையும் சென்னையில் இன்று நடைபெற்ற தவெகவின் போராட்ட மேடையில் ஒருசேர நிற்க வைத்து முழக்கங்களை எழுப்பினார் நடிகர் விஜய். Custodial Deaths Vijay TVK
திமுக ஆட்சியில் நடைபெற்ற லாக்கப் மரணங்களுக்கு நீதி கேட்டு இன்று ஜூலை 13-ந் தேதி காலை சென்னை சிவானந்தா சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த போராட்ட மேடையில், போலீசார் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் 24 பேரின் குடும்பத்தினரும் ஒன்றாக நிற்க வைக்கப்பட்டனர்.
இந்த 24 குடும்பத்தினரையும் அந்தந்த தவெக மாவட்ட செயலாளர்கள் நேற்று முன்தினம் இரவே அழைத்து வந்து சென்னையில் தங்க வைத்தனர். பின்னர் 24 குடும்பத்தினருக்கும் விஜய், நிவாரண நிதியை வழங்கினார். இதனைத் தொடர்ந்து இன்று போராட்ட மேடையில் பங்கேற்க வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகர் விஜய், லாக்கப்பில் உயிரிழந்த 24 பேரின் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் சாரி கேட்க வேண்டும், அஜித்குமார் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது போலவே 24 குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

முன்னதாக தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசும்போது, திமுக ஆட்சியில் போலீஸ் கஸ்டடியில் 31 பேர் மரணமடைந்துள்ளனர் என குறிப்பிட்டார். இதனால் மேடையில் நின்றிருந்த விஜய்-க்கு லாக்கப்பில் இறந்தது 24 பேரா? 31 பேரா? என குழப்பம் ஏற்பட்டது.
பின்னர், லாக்கப்பில் இறந்தது 24 பேர் என்று மீண்டும் உறுதி செய்து கொண்டு மேடையில் பேசினார் விஜய். இப்படி ஒரே மேடையில் ஆதவ் அர்ஜுனா லாக்கப் மரணங்கள் 31 என்றும் விஜய் 24 பேர் என்றும் பேசியது நிர்வாகிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழக்கம் போல, “மரத்தின் மீது ஏறாதீங்க.. இறங்குங்கங்க, போஸ்ட்டில் ஏறாதே, சுவர் மீது ஏறாதே, பேரிகார்டுகளை தள்ளாதீங்க.. போலீசுக்கு ஒத்துழைப்பு கொடுங்க” என தவெகவினரை ஒழுங்குபடுத்தினார்.
