இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு வீரபாண்டியனை, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ப. சிதம்பரம் இன்று சந்தித்து பேசினார்.
ராஜ்யசபா தேர்தலில் தமிழகத்திலிருந்து போட்டியிடும் காங்கிரஸ் பிரவீண் சக்கரவர்த்தி, தவெக கூட்டணியில் கம்யூனிஸ்ட்களும் இருப்பது போன்று ட்வீட் செய்ததற்கு, இடதுசாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பிரவீண் சக்கரவர்த்தி நேற்று இடதுசாரி கட்சிகளின் மாநில செயலாளர்களை சந்தித்து பேசினார்.
தொடர்ந்து மத்திய முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் இன்று கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு வீரபாண்டியனை சந்தித்து பேசினார்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சிதம்பரம் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு வீரபாண்டியனிடம், இந்த சந்திப்பு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “ப. சிதம்பரத்துடனான சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. கட்சி, அதன் வரலாறு, அவருடன் பழகிய மோகன் குமாரமங்கலம், ஏ.எம். கோபு, தா. பாண்டியன், கே.டி.கே. தங்கமணி, வி.பி. சிந்தன் போன்ற தொழிற்சங்கத் தலைவர்கள் குறித்தும், தேர்தல் முடிவுகள் குறித்தும் பொதுவாகப் பேசினோம்” என்றார்.
தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திக்கிறார்கள். உங்களை சமாதானப்படுத்தி கூட்டணியில் இணைக்க முயற்சி நடக்கிறதா என்ற கேள்விக்கு, ”கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இரண்டு மூன்று பேர் பேசி முடிவெடுக்காது, கமிட்டி பூர்வமாகத்தான் முடிவுகளை எடுக்கும். தற்போது நாங்கள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நீடிக்கிறோம். அங்கிருந்துதான் வெற்றி பெற்று அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்கிறோம். அவர்கள் நல்லாட்சி தந்து, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
ஒருவேளை கூட்டணி மாற்றம் வந்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? அதற்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தத் தயாராக இருக்கிறீர்களா?
அதெல்லாம் எதிர்காலக் கணிப்புகள். இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் திமுக கலந்துகொள்ளாது என்று சொல்லியிருக்கிறார்களே, அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அந்தக் கருத்து திமுக தலைவரின் கருத்து. நாங்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம், தேசிய அளவில் அதில் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
பிரவீண் சக்கரவர்த்தியின் அறிக்கை குறித்து…
அது அதிகாரப்பூர்வமான அறிக்கை இல்லை. அவர் எங்களை நேரில் சந்தித்தபோது, இரண்டு காங்கிரஸ் அமைச்சர்களும் வந்திருந்தார்கள். ஒரு நட்பு முறையில் பேசியபோது, அவர் கூட்டணி என்பது போன்று கூறியது தவறு என்றும், அவ்வாறு பேசியிருக்கக் கூடாது என்றும் கூறினார். அதை மேலும் பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பலரும் மாற்றுக்கட்சியில் இணைவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நம்மை போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் பல கட்சி இயங்கும் சூழலில் இதெல்லாம் மிக இயல்பாக நடைபெறுவதுதான். ஆனால், எங்கே எது நிகழ்ந்தாலும் அது நமது அரசியல் அறநெறிகளையும் சட்ட முறைமைகளையும் மீறிவிடக் கூடாது என்பதுதான் கம்யூனிஸ்ட்களின் நிலை.
