தவெக கூட்டணி .. விஜய் அழைப்பை நிராகரித்த சிபிஐ!

Published On:

| By Mathi

தவெக கூட்டணியில் இடம் பெற சிபிஐ மறுப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (செப்டம்பர் 8) செய்தியாளர்களிடம் மு.வீரபாண்டியன் கூறியதாவது: தவெக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் இரண்டு தினங்களுக்கு முன்பு எங்களது பாலன் இல்லத்திற்கு நேரில் வந்தனர். தவெக தலைமையில் ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்குவது, அதற்குப் பெயர் சூட்டுவது தொடர்பான கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

ADVERTISEMENT

அவர்களது அழைப்புக்கு மதிப்பளித்து, இன்று எங்களது நிர்வாகக் குழுவைக் கூட்டி இதுகுறித்து விவாதித்தோம். புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் செங்கோடன் தலைமையில் நடைபெற்ற இந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் காலையிலிருந்து மாலை வரை விவாதித்தோம்.

தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அளித்து வரும் ஜனநாயகபூர்வமான ஆதரவு தொடர்கிறது. நாங்கள் ஏற்கனவே எடுத்த முடிவின்படி, மக்கள் அதிகாரத்தின் மீது ஆளுநர் அமர்ந்துவிடக் கூடாது. மக்கள் அதிகாரத்திற்கு மதிப்பளித்து, ஒரு மறைமுக பாஜக ஆட்சியைத் தடுக்கும் நோக்கில்தான் நாங்கள் தவெகவை ஆதரித்தோம். அமைப்பாகக் கூடி, அரசியல் ரீதியாக நாங்கள் எடுத்த முடிவு அது. அந்த முடிவு தொடர்கிறது.

ADVERTISEMENT

மதச்சார்பின்மையில் உறுதியாக நிற்க வேண்டும்

தவெக மதச்சார்பின்மையில் உறுதியாக நிற்க வேண்டும். அவ்வாறு நிற்போம் என்று முதல்வர் பலமுறை அறிவித்திருக்கிறார். அது மெய்ப்பட வேண்டும்; மெய்ப்படும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

அதேபோன்று உழைக்கும் மக்கள், கூலித் தொழிலாளர்கள், ஊரகத் தொழிலாளர்கள், சுமை தூக்குவோர், சாலைப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள் என ஏராளமான எளிய மக்கள் தங்களது கோரிக்கைகளுக்காக நாள்தோறும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர். இவர்களது கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிமடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஒன்றிய அரசு, மாநில அரசுக்கு வழங்க வேண்டிய உரிய நிதியைத் தங்குதடையின்றி வழங்க வேண்டும். அதேநேரத்தில், தங்களது கோரிக்கைகளுக்காகப் போராடும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை மாநில அரசு அழைத்துப் பேசி, அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.

உழைக்கும் மக்களால்தான் நாடு முன்னேறுகிறது; நாடு கடந்த நிறுவனங்களால் அல்ல. எனவே, உழைக்கும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தமிழக முதல்வர் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தவெக கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்

தவெக அரசுக்கு ஜனநாயக முறைப்படி நாங்கள் அளித்து வரும் ஆதரவு தொடரும். வெளியிலிருந்து அளித்து வரும் ஆதரவும் தொடரும். ஆனால், நாளை நடைபெறவுள்ள தவெக கூட்டணிக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்க இயலாது. இதனை முறைப்படி தவெக நிர்வாகிகளிடம் தெரிவிப்பதற்காக எங்கள் கட்சியின் மாநிலப் பிரதிநிதிகள் பெரியசாமி, ரவி, டாக்டர் ரவீந்திரநாத் ஆகிய மூவரும் தவெக நிர்வாகிகளைச் சந்தித்து எங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்கச் சென்றிருக்கிறார்கள்.

அரசியல் நிபந்தனை

நிச்சயமாக எங்களது ஆதரவு ஜனநாயகபூர்வமானது. அமைப்பாகக் கூடி, அரசியல் ரீதியாக நாங்கள் இந்த முடிவை எடுத்தோம். மக்கள் அதிகாரத்தின் மீது ஆளுநர் அமர்ந்துவிடக் கூடாது என்பதை மீண்டும் மீண்டும் கூறி வருகிறோம். அதற்காகத்தான் நாங்கள் ஆதரவு அளித்தோம்.

நாங்கள் அளித்திருப்பது நிபந்தனையற்ற ஆதரவு. ஆனால், நிபந்தனையற்ற ஆதரவு என்கிறபோதே அதற்குள் ஓர் அரசியல் நிபந்தனை இருக்கிறது. அது மதச்சார்பின்மை.

இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு ஆர்.எஸ்.எஸ்., பாஜக பெரும் ஆபத்தை உருவாக்கியுள்ளன. எனவே, தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகமும் மதச்சார்பின்மையில் மிக உறுதியாக நிற்க வேண்டும்.

அதேபோன்று உழைக்கும் மக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சிறு, குறு தொழில் நடத்துபவர்கள், ஏழை எளிய மக்கள், ஊரகத் தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம்.

நாங்கள் எப்போதும் உழைக்கும் மக்களின் உரிமைகளின் பக்கம்தான் நின்று குரல் எழுப்பிக் கொண்டிருப்போம். இது எங்களது கொள்கை நிலைப்பாடு.

தவெக அரசுக்கு நாங்கள் ஆதரவு அளித்துள்ளோம். இந்த ஆதரவுக்கு முன்நிபந்தனைகள் ஏதுமில்லை. ஆனாலும் அதற்குள் இரண்டு அரசியல் நிபந்தனைகள் இருக்கின்றன — ஒன்று மதச்சார்பின்மை; மற்றொன்று உழைக்கும், ஏழை எளிய மக்களின் கோரிக்கைகள். இவ்வாறு மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.

சிபிஎம் புறக்கணிப்பு

சிபிஎம் கட்சியும் விஜய் கூட்டியுள்ள தவெக கூட்டணி கட்சிகள் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share