முதல்வர் விஜய் தலைமையில் நாளை (செப்டம்பர் 9) நடைபெறும் தமிழக வெற்றிக் கழக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கப் போவது இல்லை என்று சிபிஎம் கட்சி அறிவித்துள்ளது.
விழுப்புரத்தில் இன்று (செப்டம்பர் 8) செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன், “எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் தெளிவாக முடிவு எடுத்துள்ளோம். எந்த சூழ்நிலையிலும் நாங்கள் அமைச்சரவையில் சேரமாட்டோம்.
அன்றைக்கு இருந்த சூழலில், தவெகவை தவிர ஆட்சி யாருக்கும் அமைக்க வாய்ப்பில்லாத நிலையில் ஒரு ஆட்சி அமையாமல் போய்விடக் கூடாது என்பதற்காக நாங்கள் ஆதரவு கொடுத்தோம்.
மற்றபடி அமைச்சரவையில் சேருவதோ, நாளைக்கு கூட தவெக கூட்டணி கட்சிகள் கூட்டத்தை கூட்டி உள்ளனர்; நாங்கள் அந்த கூட்டணியில் இல்லை. அந்த கூட்டணி கூட்டத்துக்கு நாங்கள் போகப் போவதும் இல்லை. தெளிவாகவே முடிவு செய்துவிட்டோம்.
ஏற்கனவே சொல்லிவிட்டோம்.
போன மாதம் கூட்டப்பட்ட தவெக கூட்டணி கட்சிகள் கூட்டத்துக்கும் நாங்கள் போகவில்லை. அப்புறம் எப்படி இந்த மாதம் போக முடியும்? எங்களைப் பொறுத்தவரை சிபிஎம் இன்றைக்கு திமுக கூட்டணியா? அந்த கூட்டணியா? தவெக கூட்டணியா? என எந்த கூட்டணியிலும் இல்லை.
இடதுசாரி கட்சிகள் நாங்கள் இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளோம். திருச்சியில் இடதுசாரிகள் இணைந்து பெரிய பேரணி நடத்துகிறோம். அந்த பயணத்தை நாங்கள் தொடருவோம். தேர்தல் வரும் போது அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யலாம்.
இடைத்தேர்தல் தேதி நேற்றுதான் அறிவித்துள்ளனர். இதற்கு மேல்தான் நாங்கள் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம்” என்றார்.

முன்னதாக சிபிஎம் தலைவர்களை அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோர் நேரில் சென்று தவெக கூட்டணி கட்சிகள் கூட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.
