முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான தேர்தல் வழக்கில் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர். 1,05,773 வாக்குகள் பெற்ற சி.விஜயபாஸ்கர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் முருகேசனை 62,073 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்நிலையில் சி.விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வேட்பாளரான கே.கே.செல்லப்பாண்டியன் மனு தாக்கல் செய்தார்.
அதில், ”தேர்தல் பிரச்சாரத்தின் போது சி.விஜயபாஸ்கர் வாக்காளர்களுக்கு ரூ.10,000 மற்றும் ரூ.2,000-க்கான கூப்பன்களை விநியோகித்தார். வாக்காளர்கள் ஃப்ரிட்ஜ் வாங்க இந்த கூப்பன்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டார். எனவே அவரது வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த மனு இன்று (ஜூலை 15) நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, ’கூப்பன்களை வழங்கி சி.விஜயபாஸ்கர் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறார்’ என்று மனுதாரர் சுட்டிக்காட்டியதைப் பதிவு செய்து கொண்டார்.
தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாகத் தேர்தல் ஆணையம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.
