வரும் ஜூலை 20ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது.
இந்த நிலையில் மக்களவை செயலகம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில், “வரவிருக்கும் மழைக்காலக் கூட்டத்தொடரின்போது, நாடாளுமன்ற வளாகத்தில் உறுப்பினர்களின் பாதுகாப்பு, சலுகைகள் மற்றும் தனியுரிமை ஆகியவற்றைப் பாதிக்கக்கூடிய வகையில் ஸ்மார்ட் வாட்சுகள் அல்லது ஸ்மார்ட் கண்ணாடிகளைப் பயன்படுத்த கூடாது” என்று கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் எம்பியும்- ஆன மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று ( ஜூலை 17) அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “நாடாளுமன்றத்திற்குள் போராட்டம் நடத்தக்கூடாது, முழக்கமிடக் கூடாது, ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடி கூட அணியக்கூடாது!
அடுத்ததாக எம்பிக்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா?
போராடத் தடை, பேசத் தடை, பார்க்கத் தடை… நாடாளுமன்றத்தை ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றிவிட்டால் எந்தக் கேள்வியும் எழாது என்று மோடி அரசு கணக்கு போடுகிறது!
பாசிச பாஜக அரசின் கோழைத்தனம்:
– நாடாளுமன்றத்தில் அதானி பற்றி கேள்வி கேட்டால் உடனே மைக் கட் செய்யப்படும்!
– நீட் தேர்வு முறைகேடு, மணிப்பூர் வன்முறை போன்ற மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளைப் பேசினாலே அவையில் எதிர்க்கட்சிகளின் மைக் அணைக்கப்படுவது தான் இந்த ‘புதிய இந்தியா’வின் லட்சணமா?
– மக்களின் நியாயமான குரலை எழுப்பினால் எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்!
இத்தகைய தடையுத்தரவுகள் மற்றும் தணிக்கைகள் மூலம் மக்களின் குரலை உங்களால் ஒருபோதும் நசுக்கிவிட முடியாது.
மக்கள் மன்றத்தில் உங்களின் சர்வாதிகாரம் தவிடுபொடியாவது உறுதி” என்று பதிவிட்டுள்ளார்.
