ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம் பாடப்படும்’ (Vande Mataram) என்று முதல்வர் விஜய் (Vijay) தம்மிடம் தெரிவித்ததாக சிபிஎம் தமிழ் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று மே 21-ந் தேதி செய்தியாளர்களிடம் பெ.சண்முகம் கூறியதாவது: வந்தே மாதரம், அப்புறம் தேசிய கீதம், அதற்கு அப்புறம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது தொடர்பாக முதல்வர் விஜய்யிடம் கேட்டோம்.
அதற்கு, “ஆளுநர் பங்கேற்கிற நிகழ்ச்சிகளில் மட்டும் இத்தகைய நடைமுறையைத்தான் பின்பற்ற வேண்டும்” என்பது மத்திய அரசாங்கத்தினுடைய ஒரு உத்தரவு. அதை மாற்ற வேண்டும் என்பதற்கான முயற்சிகளை ஆளுநரோடு பேசி நாங்கள் மேற்கொண்டோம். ஆனால் ஆளுநர் அதை ஏற்க மறுத்துவிட்டார். மத்திய அரசாங்கத்தினுடைய பிரதிநிதி என்கிற முறையில், மத்திய அரசாங்கத்தினுடைய உத்தரவைத்தான் நான் பின்பற்ற வேண்டும் என்று ஆளுநர் தெரிவித்துவிட்ட நிலையில், ஆளுநர் பங்கேற்கிற நிகழ்ச்சிகளில் இந்த… இதைத் தவிர்க்க முடியாமல் இருக்கிறது” என விஜய், எங்களிடம் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் குறுக்கிட்டு சட்டசபையிலும் ஆளுநர் பங்கேற்கும் போது இதே நடைமுறைதானா என்ற கேள்விக்கு, “பிப்ரவரி மாதத்துக்குப் பிறகுதான் இந்த உத்தரவு என்பது வந்திருக்கிறது. அங்கே ஏத்துக்குவாங்களா இல்லையான்னு தெரியல. முதலமைச்சர் அவர்களே எங்களிடத்திலே தெரிவித்தது, ஆளுநர் பங்கேற்கக்கூடிய நிகழ்ச்சிகளில் இந்த வரிசை அடிப்படையில் தான் என்று அவர்கள் ஏற்கனவே மத்திய அரசாங்கத்தினுடைய உத்தரவு அப்படி இருக்கிற காரணத்தினால், அதை மாற்ற முடியாது என்று ஆளுநர் தெரிவிக்கிறார். ஆனால் நாங்கள் மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம் என்பதை முதலமைச்சர் எங்களிடத்திலே தெரிவித்தார்” என்றார் பெ.சண்முகம்.
அதேபோல சட்டசபையில் வந்தே மாதரம் பாடப்பட்டால் சிபிஎம் எதிர்க்குமா என்ற கேள்விக்கு, “அப்ப பார்ப்போம்” என கூறினார் பெ.சண்முகம்.
