டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் இன்று நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மூத்த இடதுசாரித் தலைவர் ஆனி ராஜா உள்ளிட்டோர் மீது சங் பரிவார் அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ வேலையில்லா திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள, இந்திய இளைஞர்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் “கரப்பான் பூச்சிகள்” என்று ஒப்பிட்டுப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மே 2026-ல், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டது.
அமெரிக்காவில் படித்து வந்த இந்திய மாணவர் அபிஜீத் திப்கே இந்த அமைப்பை உருவாக்கினார்.

இதில் கோடிக்கணக்கான மாணவர்கள் – இளைஞர்கள் இணைய வழியில் இணைந்துள்ளனர்.
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீடு முறையீடு போன்றவற்றிற்கு தார்மீக பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ,தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த அமைப்பின் சார்பாக டெல்லியில், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ஆனி ராஜா, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் நிஷா சித்து, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தேசியக் குழு உறுப்பினர் ஷாய், மற்றும் நிர்வாகிகள் விராஜ் தேவாங், ஹரிஷ்பாலா ஆகியோர் சங்பரிவார் அமைப்பினரால் தாக்கப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதல் கடுமையான கண்டனத்திற்குரியது.
இத்தாக்குதலை நடத்திய சங்பரிவார் குண்டர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது என தெரிவித்துள்ளார்.
