முதல்வர் விஜய் (Vijay) தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு தந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) முன்னாள் செயலாளர் இரா. முத்தரசன் (Mutharasan), தவெகவை மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.
தேனியில் இன்று ஜூன் 6-ந் தேதி செய்தியாளர்களிடம் முத்தரசன் கூறியதாவது: குழந்தை இப்பதான் பிறந்திருக்குது. வளரட்டும், வளர்ந்த பிறகு என்னன்னு பார்க்கலாம். குழந்தை தேறுமா, குழந்தை தேறுமா தேறாதுன்னு இப்பவே முடிவு எடுக்க முடியாது, குழந்தை பிறந்திருக்குது. இன்னும் தொப்புள்கொடி கூட அறுக்கல. வளரட்டும், வளர்ந்த பிறகு இந்த குழந்தை தேறுமா தேறாதாங்கிறத பொறுத்திருந்துதான் பார்க்கணும். குழந்தை பிறந்தவுடனேயே இது தேறாதுன்னு எப்படி முடிவு எடுக்க முடியும், தேறும்னு எப்படி முடிவு எடுக்க முடியும்? ரெண்டும் முடிவு எடுக்க முடியாது. பொறுத்திருந்து பார்க்கணும்.
தவெகவுக்கு கொள்கை, கோட்பாடுன்னு ஒரு கத்திரிக்காயும் கிடையாதுங்க, ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. கொள்கை, கோட்பாடு அதெல்லாம் ஒன்னும் கிடையாது.
அந்தக் கட்சி 108 இடங்கள்ல, 107 உறுப்பினர்கள் வெற்றி பெற்றார்கள். இடம் 108, உறுப்பினர்கள் 107. ஆட்சி அமைப்பதற்கு சட்டமன்றத்துல இருக்கிற கட்சிகள்ல அந்தக் கட்சிதான் அதிக எண்ணிக்கையில இருக்கிற காரணத்தினால, ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு அனுமதி கோரி கடிதம் கொடுத்தார்கள். ஆளுநரு அமைச்சரவையை அமைப்பதற்கும் பெரும்பான்மையை குறிப்பிட்ட நாளுக்குள் நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும், அனுமதி அளித்திருக்க வேண்டும். ஆனால் ஆளுநர் அதை செய்யவில்லை.
எப்படி சசிகலா காலத்தில் காலத்தை நீடித்து, பிறகு நீதிமன்ற தீர்ப்பை விரைவுபடுத்தி அவங்களை ஜெயில்ல அனுப்பிச்சிட்டு வேற ஒரு ஆட்சி அமைச்சாங்களோ, அந்த மாதிரியான ஒரு ஆட்சியே தமிழ்நாட்டுல அமையாமல் இருப்பதற்கும், அந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி மறைமுகமாக ஆட்சி நடத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தன. அதுக்கு மேல அதுல ஒன்னும் கிடையாது. இவ்வாறு முத்தரசன் கூறினார்.
