திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 23) தனது குடும்பத்தினருடன் தேனாம்பேட்டை வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.
மார்ச் 31ஆம் தேதி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்காக வாக்கு சேகரித்தார். இறுதியாக, ஏப்ரல் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் தனது பிரச்சாரத்தை முடித்தார். 36 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்ட அவர், தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, வரலாற்றில் முதல் முறையாக திமுக தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்குமான தேர்தல் தான் 2026 சட்டமன்ற தேர்தல்” என்ற கோணத்தில் தனது பிரச்சாரத்தை ஸ்டாலின் வடிவமைத்தார்.
இந்நிலையில், சென்னை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், அவரது மனைவி துர்கா, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா, பேரன் உள்ளிட்ட குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,
“நான் என் ஜனநாயகக் கடமையை ஆற்றியதைப் போல, தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்ற வேண்டும். தமிழ்நாடு வெல்லும்” என்று தெரிவித்தார்.
வாக்களித்த பிறகு முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்!
2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள். இன்று நீங்கள் அளிக்கப் போவது வாக்கல்ல; தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் ஏந்தும் கேடயம்! உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.
ஜனநாயகம் – மதச்சார்பின்மை – மாநில உரிமைகள் – சமத்துவம் – சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உங்களின் வாக்கு அமையட்டும்! தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெல்லும்!” என தெரிவித்துள்ளர்.
