சென்னை மாநகராட்சியில் நிதி முறைகேடு மற்றும் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய புகார்களின் அடிப்படையில், 4 மூத்த அதிகாரிகள் உட்பட 6 பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் சமீரன் அதிரடி யாக உத்தரவிட்டுள்ளார்.
டெண்டர் முறைகேடு, நிதி முறைகேடு மற்றும் லஞ்சப் புகார்களின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மண்டல சுகாதார அதிகாரி தேவிகலா, மூத்த பூச்சியியல் வல்லுநர் சிவ பொற்கொடி, உதவி செயற்பொறியாளர் ஆனந்தராவ், சாலைப் பணியாளர் பாஸ்கர், பில் கிளார்க்குகள் துர்கா மற்றும் கண்ணன் ஆகிய 6 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதோடு, இவர்களில் 4 பேர் மீது கிரிமினல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சென்னை மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் யார்
2025 – 2026ல் மருத்துவ உபகரணங்களை வாங்குவதில் ரூ. 9 லட்சம் மதிப்பிலான போலி ரசீதுகளைச் சமர்ப்பித்ததாக மணலி மற்றும் மாதவரம் மண்டல சுகாதார அதிகாரியான டாக்டர் தேவிகலா, ஜூலை 9-ல் பணியிடை நீக்கம்
ஷெனாய் நகரில் உள்ள மண்டல துணை ஆணையர் அலுவலகத்தில் நிபுணராகப் பணியாற்றும் சிவ பொற்கொடி மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு இளைஞரிடமிருந்து ரூ. 6 லட்சம் பெற்றதற்காக ஜூலை 11ம் தேதி பணியிடை நீக்கம்
மாதவரம் மண்டல உதவிச் செயற்பொறியாளர் ஆனந்தராவ் கட்டட உரிமையாளர் ஒருவரிடம் ரூ. 2.5 லட்சம் லஞ்சம் கேட்டதற்காக ஜூலை 10ம் தேதி பணியிடை நீக்கம்
கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மாநகராட்சி சாலைப் பணியாளர் பாஸ்கர், முறையான அனுமதி பெற்றிருந்த கட்டட உரிமையாளர் ஒருவரை, கட்டடத்திற்கு பூட்டி சீல் வைப்பதாக மிரட்டி ரூ. 50 ஆயிரம் லஞ்சம் பெற்றதற்காக ஜூலை 10ம் தேதி பணியிடை நீக்கம்
ராயபுரம் மண்டலத்தில் இயந்திரவியல் துறை ஒப்பந்ததாரர் ஒருவரிடமிருந்து பில் கணக்கு முடித்து பணம் பெற்று தருவதற்கு லஞ்சம் கேட்டதற்காக, NULM பணியாளரான கண்ணன் என்பவர் பணியிடை நீக்கம்
