கேரளாவில் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாடு , புதுவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று ( ஆகஸ்ட் 2 ) செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர்,
“தமிழகத்தின் வளிமண்டல மத்திய பகுதியில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கின்ற சேசோன் பகுதி நிலவுகிறது.
இந்த பகுதி அடுத்து வரும் தினங்களில் வடக்கு நோக்கி நகர கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. 10 இடங்களில் கனமழையும் நான்கு இடங்களில் லேசான மழையும் பெய்துள்ளது.
அதிகபட்சமாக சின்ன கல்லாரில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்” என்றார்.

மேலும், “தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, மாவட்டங்களில் ஆகஸ்ட் 2 மற்றும் 3 தேதிகளில் ஓரிரு இடங்களில் அதிகன மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், ஆகஸ்ட் 4 ஆம் தேதி கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கன மழை பெய்யக்கூடும் என்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை பொருத்தவரையில் குமரி கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் குமரி கடல் பகுதிகளுக்கு அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை மற்றும் புறநகர் பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்மேற்கு பருவமழை பொறுத்தவரையில் கடந்த ஜூன் 1 முதல் இன்று வரை உள்ள காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழை அளவு 242 மில்லி மீட்டர்.
இந்த காலகட்டத்தில் இயல்பான மழையின் அளவு 125 மில்லி மீட்டர்” என்று கூறினார் பாலகிருஷ்ணன்.
சென்னை துறைமுகத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் கருவி நீண்ட நாட்களாக பழுதடைந்து இருந்த நிலையில் நாளை முதல் புதுப்பிக்கும் பணி தொடங்குகிறது என்றும் அவர் கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நிர்மலா பேச்சு: கிண்டலடிக்கும் சுவாமி… கேள்வி கேட்கும் திருமா