சொத்துக்குவிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக திமுக எம்.பி கிரிராஜன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி விஜயபாஸ்கர், எம் ஆர் விஜயபாஸ்கர், காமராஜ், கே சி வீரமணி, கே பி அன்பழகன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் சேலம் இளங்கோவன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு- பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது கிரிராஜன் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதாடினார்.
முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக் குறிப்பு வழக்குகள் தொடர்பாக பொதுத்தலங்களில் தகவல்கள் இடம்பெற்றும் கூட குறிப்பிட்ட சிலர் மீது நடவடிக்கை எடுக்காததன் மூலம் அமலாக்கத்துறை கடமை தவறிவிட்டதாக அவர் வாதங்களை முன்வைத்தார்.
தொடர்ந்து, சட்டபூர்வ அமைப்பான அமலாக்கத் துறை கடமை செய்யத் தவறும் போது நீதிமன்றம் கேள்வி எழுப்பலாம். கூட்டணியில் இருப்பதால் முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இது அரசியல் உள்நோக்கம் கொண்டது இல்லையா? என்றும் கேள்வி எழுப்பினார்.
அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யும்படி அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு விட முடியாது. இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது. இது பொதுநல வழக்கு அல்ல. வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்
