கோடையில் காலை வேளையில் பசியின்மை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் காலை உணவுக்குப் பதிலாக அல்லது 11 மணியளவில் இதைப் பருகலாம். புரொக்கோலி உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்தாகிறது; கொலஸ்ட்ரால் அதிகரிப்பைத் தடுக்கிறது. இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதயம் வலிமை பெற மிகவும் துணை புரிகிறது. இதில் அதிக கால்சியம், நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.
என்ன தேவை?
- நறுக்கிய புரொக்கோலி – ஒரு கப்
- பூண்டு – 10 பல்
- தோல் சீவி துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
- அரிசி கழுவிய தண்ணீர் – 4 கப்
- பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா கலவை – ஒரு கைப்பிடி அளவு
- இந்துப்பு, வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன்
- ஆரிகானோ – ஒரு டீஸ்பூன் அல்லது காய்ந்த துளசி இலை – சிறிதளவு எலுமிச்சைப் பழம் – பாதி அளவு (சாறு பிழியவும்)
- பட்டை – 2 சிறிய துண்டு
- சின்ன வெங்காயம் – 5 (தோலுரிக்கவும்)
- தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்).
எப்படிச் செய்வது?
குக்கரில் புரொக்கோலியுடன் தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சித் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா, இந்துப்பு, பட்டை, அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூன்று விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து மத்தால் ஒரு சுற்று கடையவும். அதனுடன் வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள், ஆரிகானோ, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து வடிகட்டாமல் இளம் சூடாகப் பருகலாம்.
