மத்தியில் ஆளும் பாஜக (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ளது “Cockroach Janta Party”.
உச்ச நீதிமன்றத்தில் கடந்த மே 15-ந் தேதியன்று வழக்கு விசாரணையின் போது, தலைமை நீதிபதி சூர்யா காந்த், வேலையில்லாத இளைஞர்களை “கரப்பான் பூச்சிகள்” (Cockroaches) மற்றும் “சமூகத்தின் ஒட்டுண்ணிகள்” என்று ஒப்பிட்டுப் பேசியதாக விமர்சனம் எழுந்தது.
ஆனால் போலிப் பட்டப் படிப்புகளைக் கொண்டு முறைகேடு செய்பவர்களையே தாம் அவ்வாறு விமர்சித்ததாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் விளக்கம் தந்தார்.

இங்கிருந்துதான் ”Cockroach Janta Party” உருவெடுத்தது.
கடந்த மே 16-ந் தேதி அபிஜீத் திப்கே (Abhijeet Dipke) என்ற 30 வயது இளைஞர் ”Cockroach Janta Party” என்கிற சமூக வலைதளப் பக்கத்தை தொடங்கினார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் (AAP) முன்னாள் சமூக ஊடக பொறுப்பாளராக இருந்தவர். தற்போது பாஸ்டன் பல்கலைக்கழக மாணவர்.
“Voice of the Lazy & Unemployed” என்பதுதான் இந்த ”Cockroach Janta Party” -ன் முழக்கம்.
அத்துடன்
- ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகளுக்குப் பதவிக்கு பின் ‘ராஜ்யசபா’ எம்பி பதவி வழங்கக் கூடாது
- நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 50%-ஆக உயர்த்த வேண்டும்; மத்திய அமைச்சரவையிலும் 50% இடங்கள் பெண்களுக்கு வழங்க வேண்டும்.
- கட்சி தாவும் எம்பிக்கள் (MPs) மற்றும் எம்எல்ஏக்கள் (MLAs) தேர்தலில் போட்டியிட 20 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும்.
- ஆளும் அரசுக்குச் சாதகமாகச் செயல்படும் ஊடகவியலாளர்களின் (Godi Media) வங்கி கணக்குகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
- தேர்வு முறைகேடுகள், CBSE போன்ற கல்வி வாரியங்களின் கூடுதல் கட்டணக் கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்பது உள்ளிட்டவை இதன் முழக்கங்கள்.
இந்த கொள்கைகளின் அடிப்படையில் அரசியல் விமர்சனங்களை கேலி கிண்டல் தொனியில் முன்வைத்து வருகிறது Cockroach Janta Party.
இதனையடுத்து இதன் சமூக வலைதளப் பக்கங்களை பின் தொடருவோர் எண்ணிக்கை திடீரென 1 கோடிக்கும் அதிகமாகி விஸ்வரூபம் எடுத்தது.

இதனால் அதிர்ந்து போன மத்திய அரசு உடனடியாக Cockroach Janta Party-ன் சமூக வலைதளப் பக்கங்களை முடக்கியது. ஆனாலும் மீண்டும் Cockroach Janta Party சமூக வலைதளப் பக்கம் தொடங்கப்பட்டு பல்வேறு முழக்கங்களை முன்வைத்து வருகிறது.
