தமிழகம் உட்பட இந்தியாவில் பல மாநிலங்களில் பல்வேறு தொகுதிகள் காலியாக உள்ளன. இந்தசூழலில் வடமாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம், தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு தேதி அறிவிக்கவில்லை.
பீகார், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள பாங்கிபூர், ததியா, மஞ்சல்பூர் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (ஜூலை 2) அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 30ஆம் தேதி வாக்குப்பதிவும், ஆகஸ்ட் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 7 தொகுதிகள் காலியாக உள்ளன.
முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன.
இதுதொடர்பாக சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தும், அரசிதழில் வெளியிட்டிருக்கும் நிலையிலும் தேர்தல் தேதி ஏன் அறிவிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேசமயம் மேலும் ஒருசில அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய வாய்ப்பிருக்கலாம் என்றும் தகவல்கள் வருகின்றன. இடைத்தேர்தல் நடத்த 6 மாதம் கால அவகாசம் இருப்பதால் தாமதமாக தமிழகத்துக்கு தேதி அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
