கிண்டி பன்னோக்கு மருத்துவமனை மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞருக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த நவம்பர் 13ஆம் தேதி கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் பாலாஜியை புதுபெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்டார்.
இதில் படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜி சிகிச்சைக்கு பின் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதனிடையே மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷை மருத்துவமனை பணியாளர்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். அவர் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் விக்னேஷ் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன் இன்று (நவம்பர் 22) விசாரணைக்கு வந்தது.
அப்போது போலீசார் தரப்பில், “மக்கள் அதிகம் கூடும் மருத்துவமனைக்கு ஆயுதம் எடுத்து வந்து, தாக்குதல் நடத்தியுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில் விக்னேஷுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என்று வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, விக்னேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா