தமிழ்நாடு பாஜாகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கிய ‘வீ த லீடர்ஸ்’ (We The Leaders) இயக்கத்தின் முதல் மாநில மாநாடு, இன்று மாலை கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
கடந்த ஜூலை மாதம் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய அண்ணாமலை, தற்போது ‘வீ த லீடர்ஸ்’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பில் சுமார் 19 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, ‘போதை இல்லா தமிழகம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து, இந்த இயக்கத்தின் முதல் மாநில மாநாடு இன்று பொள்ளாச்சியில் நடத்தப்பட்டு வருகிறது.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பங்கேற்பு:
இந்த மாநாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. ‘ட்ரக் ஃப்ரீ தமிழ்நாடு அவேர்னஸ்’ (Drug Free Tamil Nadu Awareness) என்ற பெயரில் நடைபெறும் இந்த மாநாட்டில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அண்ணாமலை ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டிற்கு வருகை தந்துள்ள பொதுமக்களின் வசதிக்காகக் குடிநீர், கழிவறை, ஓய்வறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மாநாட்டு அரங்கில் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன.
தொண்டர்களை வணங்கிய அண்ணாமலை:
மாநாட்டு மேடைக்கு வருகை தந்த அண்ணாமலை, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களை நோக்கி மேடையில் சாஷ்டாங்கமாக விழுந்து தனது வணக்கத்தைத் தெரிவித்தார். இதனால் மாநாட்டுத் திடல் முழுவதும் தொண்டர்களின் உற்சாக முழக்கம் எதிரொலித்தது.
