கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசியலில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறார் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை.
ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்த அண்ணாமலை தற்போது கட்சியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து பாஜக தேசிய தலைவர் நிதின் நபினிடம் கடிதம் வழங்கியிருக்கிறார். தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசினார்.
அப்போது தான் பாஜகவில் இருந்து விலகுவதற்கான காரணத்தை அண்ணாமலை அமித்ஷாவிடம் கூறியிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்தசூழலில் அண்ணாமலைக்கு ஆதரவாக தமிழகத்தின் சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. சென்னை பாஜக அலுவலகம் அருகே ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், “தீயசக்தி, தூயசக்தி எல்லாம் நோ மோர்… தலைவா தலைமை ஏற்க வா” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
கோவை மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பிலும் அண்ணாமலைக்கு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், தலைவா ஆணையிடு அண்ணாமலை மகுடம் சூட என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் “Annamalai ji” என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
அந்தவகையில் அண்ணாமலை முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து பேசியது இன்று (ஜூன் 3) அவரது பிறந்தநாளில் வைரலாகி வருகிறது.
அதாவது பிகைன்வுட்ஸ் சேனலுக்கு முன்னதாக அவர் அளித்த பேட்டியில் “கலைஞர் அவர்கள் நிறைய பண்ணியிருக்காங்க. என் வாயில கருணாநிதி என்கின்ற வார்த்தை வராது. காரணம், இந்த அரசியல் எல்லாம் தாண்டி கலைஞர் அவருடைய அரசியலை பார்த்திருக்கின்றோம், அதைப் பார்த்து வளர்ந்திருக்கின்றோம். அரசியல்ல ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருந்தால், நாகரீகமான முறையில தொடர்ந்து நான் சொல்லிட்டு இருக்கேன்.
தமிழ்நாடு எப்படி இருந்துச்சு, கரப்ஷன் யாருக்கு காரணம் எல்லாமே நம்ம பேசலாம், அது வேற. அதற்காக ஒரு மனிதனுடைய மொத்த வாழ்க்கையை எடுத்து ஆராய்ந்து, தமிழ்நாட்டுக்காக தமிழுக்காக என்ன குடுத்திருக்காரு அப்படின்னா கலைஞர் வந்து டாப்ல இருப்பாரு.
அப்படி இருக்கும்போது கலைஞர்ங்கிற வார்த்தையே அதுக்குத்தானே கொடுக்கப்பட்ட ஒரு வார்த்தை. எனவே நான் கருணாநிதி என்ற வார்த்தைய நான் சொல்ல மாட்டேன்” என்று கூறியுள்ளார் அண்ணாமலை.
