தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் இன்று (ஜூன் 3) காலை முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் G. வெங்கடராமன் தற்காலிகப் பொறுப்பு டிஜிபியாக திமுக அரசு நியமித்தது.
இதைத்தொடர்ந்து கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் காலத்தில் தேர்தல் ஆணையம் சந்தீப் ராய் ரத்தோரை சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக நியமித்தது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் முதல்வரானார். இதைத்தொடரந்து புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் ஆலோசனைக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழக தலைமைச் செயலர் சாய்குமார், உள்துறை செயலர் மணிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ் குமார் அகர்வால் ஆகிய மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலுக்கு UPSC ஒப்புதல் அளித்தது.
மத்திய அரசு அனுப்பிய பட்டியலில் இருந்து தமிழக அரசு மகேஷ் குமார் அகர்வாலை சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக நியமித்தது.
இதனைத் தொடர்ந்து BSF-இல் கூடுதல் இயக்குநர் பொறுப்பில் இருந்த அவர் நேற்று விடுவிக்கப்பட்டு சென்னை திரும்பினார்.
இன்று காலை டிஜிபி அலுவலகத்தில் அவர் தமிழக காவல்துறை தலைமை இயக்குநராக பொறுப்பேற்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.
புதிய டிஜிபியாக பொறுப்பேற்ற பின்னர் பேசுகையில், “தமிழக மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முன்னுரிமை அளிக்கப்படும்.சைபர் குற்றங்களை தடுக்கவும், போதைப்பொருள் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்றார்.
