2016 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
2016 சட்டமன்ற தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் தற்போது எம்பி ஆக இருக்கும் இன்பதுரை, திமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் களம் கண்டனர்.
இதில் இன்பதுரை 69 ஆயிரத்து 590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகவும், அப்பாவு 69 ஆயிரத்து 541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் என்பது 49 என குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தது.
இந்த சூழலில் இன்பதுரையின் வெற்றியை எதிர்த்தும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் தபால் வாக்குகளையும், 19,20,21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளையும் மீண்டும் எண்ண வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.
அதன்படி 2019 அக்டோபர் 4ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்தியாவிலேயே தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றத்திலேயே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது இதுவே முதன் முறையாகும். அன்று நீதிமன்றத்தில் என்ன நடந்தது என நமது மின்னமபலத்தில், “ராதாபுரம்: மறுவாக்கு எண்ணிக்கை முடிவு- சிரிப்பவர் யார்?” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை கேட்டு இன்பதுரை உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
ஆனால், உச்ச நீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கவில்லை. முடிவுகளை வெளியிட தடை விதித்தது.
தொடர்ந்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. அதற்குள் 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட அப்பாவு வெற்றி பெற்று சபாநாயகராக பணியாற்றினார்.
இந்த சூழலில் 2016 தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பு வழங்கினார்.
அதில் 104 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அப்பாவு வெற்றி பெற்றது மறுவாக்கு எண்ணிக்கையில் நிரூபணம் ஆகி உள்ளது.
இந்த தீர்ப்பால் இன்பதுரை தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்று ஆகாது. ஆனால் இந்த 5 ஆண்டுகளுக்கான எம்எல்ஏ பென்சன் உள்ளிட்ட சலுகைகளை அவர் கேட்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இந்த தீர்ப்பை தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சபாநாயகர் அப்பாவு, “2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நான் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பு இழந்ததாக அறிவித்தார்கள்.
அப்போது நான் எலக்சன் பெட்டிஷனாக உயர்நீதிமன்றத்திலே, தபால் வாக்குகள் 203 வாக்குகளை எண்ணாமல் முடிவை அறிவித்து விட்டார்கள், ஆகவே அது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று சொல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்று பல நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பிறகு, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர், எண்ணாமல் இருந்த தபால் வாக்குகளை எண்ணுவதற்கு அக்டோபர் மாதம் 2019 ஆம் ஆண்டு 1ஆம் தேதி உத்தரவிட்டார். அக்டோபர் மாதம் 4ம் தேதி 2019-லே அந்த வாக்குகள் எண்ணப்பட்டது.
அந்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் 104 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றதாக உயர்நீதிமன்ற நீதியரசர் இன்று அறிவித்திருக்கின்றார்.
இன்பதுரை தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அறிவித்து, நம்முடைய தலைமை செயலகம் உட்பட அனைத்து ஆவணங்களிலும் அவருடைய பெயரை நீக்கிவிட்டு, 2016 முதல் 2021 வரை உள்ள காலகட்டத்தில் அவர் பெயர் இருக்கின்ற இடங்களில் எல்லாம் அதை நீக்கிவிட்டு, என்னுடைய பெயரை பொறிக்க வேண்டும் என்று சொல்லி நீதிமன்ற நீதியரசர் கூறியிருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. நீதி வென்றது!
இந்த காலதாமதெல்லாம் எனக்கு பெரிதாக தெரியவில்லை, நீதி வென்ற மகிழ்ச்சியில் உள்ளேன். உச்ச உயர் நீதிமன்ற படிகளில் எத்தனை முறை ஏறி இறங்கியிருக்கோம். இன்று நம்முடைய நீதியரசருடைய தீர்ப்பு அந்த வலிக்கு நிவாரணமாக உள்ளது” என்று கூறினார்.
