ராமதாஸ் படத்தை பயன்படுத்துவதற்கு அன்புமணி தரப்புக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாசுக்கும் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், கட்சியின் பெயரையோ தனது புகைப்படத்தையோ மாம்பழம் சின்னத்தையோ பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த விவகாரத்தில் உரிமையியல் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவை ராமதாஸ் தொடர்ந்த இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்தன.
இதையடுத்து சென்னை 13வது உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் சார்பில் புதிய வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
அதில் அன்புமணி கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. பாமக தலைவராக சட்டவிரோதமாக நீடித்து வருகிறார். சட்டமன்றத் தேர்தலில் தனது புகைப்படங்களை பயன்படுத்தி வருகிறார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்னுடைய புகைப்படத்தை அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் 18 பேரும் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு குறித்து அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்திரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் உரிமையியல் நீதிமன்றத்தில் மீண்டும் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது அன்புமணி தரப்பினர் பாமக நிறுவனர் ராமதாஸ் படங்களை பயன்படுத்த தடைவிதித்து உத்தரவிடப்பட்டது.
இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது
