தமிழக முதல்வர் விஜய் (CM Vijay) கரூருக்கு செல்ல திட்டமிட்டிருப்பது குறித்து அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது.
கரூரில் கடந்த ஆண்டு தவெகவின் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. அதில் தவெக தலைவரான தற்போதைய முதல்வர் விஜய் பங்கேற்றார். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியானது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் முதல்வர் விஜய், கரூர் மாவட்ட நிகழ்ச்சிகளில் ஜூலை 2-வது வாரத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக அதிமுகவின் கரூர் மாவட்ட செயலாளர் கமலக் கண்ணன் கூறுகையில், “கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களை தேர்தலுக்கு முன்னரும் விஜய் வந்து பார்க்கவில்லை; தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் பார்க்கவில்லை.
இப்போது கரூருக்கு முதல்வர் விஜய் வருகை தருகிறார். இதற்கு காரணம், கரூர் எம்.எல்.ஏ.வாக இருந்த அதிமுகவின் எம்.ஆர். விஜயபாஸ்கர் தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதனால் கரூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
கரூர் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு முதல்வர் விஜய் வந்தால், “ஏன் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் வந்து சந்திக்கவில்லை?” என கேள்வி கேட்பார்கள். அதைத் தவிர்க்கத்தான் முன்கூட்டியே கரூருக்கு முதல்வர் விஜய் வருகை தர திட்டமிட்டுள்ளார்.. முதல்வர் விஜய்க்கு மனசாட்சியே இல்லையா?” என கேள்வி கேட்டுள்ளார்.
