அதிமுகவில் (AIADMK) உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் 3 மணி நேரத்தில் திருப்பங்களுடன் சில முடிவுகள் தெரியும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி சண்முகம் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சி தற்போது வரை மொத்தம் 11 தேர்தல் தோல்விகளை சந்தித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் அதிமுகவின் சட்டசபை குழு தலைவராக எடப்பாடி பழனிசாமிக்கு 17 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து சட்டசபை செயலாளர், சட்டசபை தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
இதனால் 30 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடிக்கு எதிரான எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் அணியில் இருப்பது உறுதியாகி உள்ளது.
இந்த பின்னணியில் சென்னையில் சிவி சண்முகத்திடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “எம்.எல்.ஏ.வாக பதவியேற்க செல்கிறேன்.. அடுத்த 2 அல்லது 3 மணி நேரம் பொறுத்திருங்கள்” என்று புதிர் போட்டுவிட்டு கிளம்பினார்.
இதனால் அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.
