முதல்வர் விஜய் அரசு மீது சட்டசபையில் இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
அதிமுகவின் சட்டசபை குழு தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டனர். இது தொடர்பான கடிதம் சபாநாயகரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் எஸ்பி வேலுமணியை சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுத்துள்ளதாக அதிமுக எம்.எல்.ஏக்களில் ஒரு பிரிவினர் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
இந்த கடிதங்கள் மீது சபாநாயகர் இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.
தற்போதைய நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பிரிவுதான் அதிமுகவாக சட்டசபையில் கருதப்படுகிறது. அதனடிப்படையில், விஜய் அரசுக்கு எதிராக வாக்களிப்போம் என்பதுதான் அதிமுகவின் கொறடா உத்தரவு.
ஆனால், எஸ்பி வேலுமணி பிரிவு விஜய் அரசை ஆதரித்து வாக்களிப்போம் என அறிவித்துள்ளது. இதனாலேயே முதல்வர் விஜய் நேற்று எஸ்பி வேலுமணி பிரிவு எம்.எல்.ஏ.க்களை சந்தித்தும் பேசியிருந்தார்.
அதே நேரத்தில், அதிமுகவின் கொறடா உத்தரவை மீறினால் பதவி பறிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என அதிமுக எச்சரித்துள்ளது. அதிமுக கட்சி என்பது வேறு; அதிமுக சட்டமன்ற கட்சி என்பது வேறு எனவும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் எடப்பாடி பழனிசாமி அணியில் 26 எம்.எல்.ஏக்கள் இருப்பதாக அப்பிரிவின் மூத்த தலைவரான ஓ.எஸ். மணியன் கூறியிருந்தார். இந்த 26 எம்.எல்.ஏ.க்களும் விஜய் அரசுக்கு எதிராக வாக்களிக்க உள்ளனர்.
எஸ்பி வேலுமணி அணியில் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எடப்பாடி அணியின் கருத்தின் அடிப்படையில் 21 எம்.எல்.ஏக்கள், எஸ்பி வேலுமணி அணியில் உள்ளனர். இந்த 21 பேரும் சட்டசபையில் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளனர்.
அப்படி விஜய் அரசுக்கு ஆதரவாக 21 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தால் அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி பறிப்பு நடவடிக்கை எடுக்க அதிமுக கோரும் என்பதால் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.
