அதிமுக தோல்வியால் நேர்ந்த துயரம்: வீடியோ வெளியிட்டு விபரீத முடிவெடுத்த நிர்வாகி.. எடப்பாடிக்கு உருக்கமான வேண்டுகோள்!

Published On:

| By Pandeeswari Gurusamy

ADMK

கும்பகோணம் அருகே அதிமுகவின் தேர்தல் தோல்வி மற்றும் உட்கட்சி பிளவால் ஏற்பட்ட மன உளைச்சலில், அக்கட்சியின் வர்த்தக அணி நிர்வாகி மகேந்திரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. அதேநேரம், 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், கடந்த மே 10-ஆம் தேதி ஆட்சி அமைத்தது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்; காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

ADVERTISEMENT

கடந்த சில தினங்களுக்கு முன் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவின் நான்கு எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இந்தத் தோல்வி மற்றும் உட்கட்சி பிளவால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி இணைச் செயலாளர் K.A.S. மகேந்திரன், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

மகேந்திரனின் உருக்கமான வீடியோ

அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும். கட்சி தோற்றுப்போனது பெரும் வேதனை அளிக்கிறது. அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால், அதில் அதிமுகவின் எளிய தொண்டனாகப் பிறக்க வேண்டும். எனது உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து மலர்வளையம் வைக்க வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த வீடியோவை வெளியிட்ட சிறிது நேரத்தில், திருப்பனந்தாள் அருகேயுள்ள பாலூர் பகுதியில் மகேந்திரன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட அவரது உடல், தற்போது பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகேந்திரனின் மறைவுக்கு அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் எக்ஸ் தளத்தில், “தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் K.A.S.மகேந்திரன் தனது உயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலும் வருத்தங்களும்.

ADVERTISEMENT

கழகத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் என்பது அனைத்து தொண்டர்களையும் மன வேதனைக்கு ஆளாக்கி உள்ளது என்பது உண்மை தான் என்றாலும், அதற்கு இதுபோன்ற முடிவுகள் ஒருபோதும் தீர்வு ஆகாது.

தியாகம் என்ற பெயரில் எந்த ஒரு தொண்டரும் தன்னை வருத்திக் கொள்வதையோ, உயிரை மாய்த்துக் கொள்வதையோ ஒருகாலும் ஏற்றுகொள்ள முடியாது.

எந்த ஒரு சோதனை என்றாலும் அதை மன உறுதியோடு எதிர்கொண்டு வெல்ல வேண்டும் என்பதே மாண்புமிகு அம்மா அவர்கள் நமக்கெல்லாம் கற்றுத் தந்த நெறி!” என அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share