பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பற்றி பல்வேறு செய்திகள் பரவி வரும் நிலையில் இது தொடர்பாக இரண்டு நாட்களில் பதில் அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பு வகித்தபோது தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போது தனக்கென தனி ஆதரவாளர்களையும் உருவாக்கினார்.
இந்த சூழலில் மாநில தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அவருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த சூழலில் கடந்த சில தினங்களாக அண்ணாமலை தனி கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.
வரும் 4ம் தேதி அண்ணாமலை தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கோவை மாநகரைச் சேர்ந்த உத்தம பாலாஜி ராமசாமி தனது உத்தம பவுண்டேஷன் அமைப்பின் சார்பில் கோவை மாநகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளார்
சிங்காநல்லூர், அவிநாசி சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ’எங்கள் தலைவா தலைமை ஏற்க வா… தலைவா தரணி ஆள வா’ என இடம்பெற்றுள்ள வாசகங்களும் தமிழக அரசியலில் கவனத்தை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இன்று டெல்லி செல்ல சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் ’புதிய கட்சி என தகவல் பரவுகிறது. எதற்கும் நீங்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை’ என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர், ‘இப்போது பேசினால் முறையாக இருக்காது. இரண்டு நாட்களில் எல்லாம் பொறுமையாக பேசுகிறேன். எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன். இப்போது வழிவிட்டால் விமானத்தை பிடிப்பதற்கு சரியாக இருக்கும். அன்புக்கு நன்றி’ என்று கூறிவிட்டு புறப்பட்டார்
