தமிழ்நாட்டைச் சாராதவருக்கு பதவியா? வெங்கட நாராயணா நியமனத்துக்கு வலுக்கும் கண்டனம்!

Published On:

| By Kavi

தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். 

தவெக அரசின் இந்த முடிவுக்கு  தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

ADVERTISEMENT

அதிமுக ஐடி விங்

கர்நாடக காங்கிரஸ் அரசின் Proxy Government-ஆக செயல்படுகிறதா தமிழகத்தில் உள்ள பொய்க்கால்_குதிரை_அரசு?

ADVERTISEMENT

தமிழ்நாட்டைச் சாராத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்?

உங்கள் வெளிவராத படத்தின் தயாரிப்பாளர் என்ற Credential இருந்தால் போதுமா விஜய்

ADVERTISEMENT

அதுவும் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே மேகதாது அணை பிரச்சனை நிலவிவரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை அரசின் போக்கு ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு எதிராகவே இருப்பது ஏன்?

புதிய ஆணையம் என்ற பெயரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மழுங்கடிக்கும் வகையில் ஒரு இடைச்செருகல் தீர்மானத்தை நிறைவேற்றிய இந்த ஆச்சரியக்குறி அரசு, தற்போது கர்நாடகத்தை சேர்ந்த, பெங்களூரில் அலுவலகம் வைத்து திரைப்படம் தயாரிக்கும் ஒருவரை தமிழக அரசின் பிரதிநிதியாக அனுப்புவது எப்படி தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் என்பதை இன்றைய முதல்வர் மக்களுக்கு விளக்க வேண்டும்!

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஓர் இணைப்புப் பாலமாகச் செயல்பட வேண்டிய முக்கியப் பொறுப்பில், தமிழகத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை எப்படி நியமிக்கலாம்? அன்னைத் தமிழ் மொழியையும், நமது தமிழ் கலாச்சாரத்தையும் முழுமையாக அறியாத ஒருவர் எப்படி தமிழக மக்களின் எண்ணத்தையும், தமிழக அரசின் குரலையும் டெல்லியில் எதிரொலிக்க முடியும்?

சட்டம் அறிந்த, நாடாளுமன்ற நடப்புகள் அறிந்த தமிழகத்தைச் சார்ந்தோரையெல்லாம் விடுத்து, கர்நாடக முதல்வர் திரு. டி.கே.சிவகுமாரின் நெருங்கிய நண்பரைப் பிரதிநிதியாக நியமிக்கக் காரணம் என்ன?

அவர் நடித்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பதாலா? அல்லது, காங்கிரஸின் நிர்பந்தமா? கூட்டணிக் கட்சியான காங்கிரஸிடம் பேசி மேகதாது அணைப் பிரச்சனையை முடிக்காமல், டெல்லி வரை கடிதம் எழுதியது போதாதென்று, இன்று கூட்டணிக் கட்சியின் நிர்பந்தத்திற்கு பயந்து, கர்நாடக மாநிலத்தவரை டெல்லிக்கு அனுப்பி தமிழர்கள் நலனைக் கைகழுவுவது தான் தூய சக்தியா?

மாற்று சக்தி என்று கூறி, காங்கிரஸின் கைப்பாவையாகச் செயல்பட்டு, தமிழகத்தை இப்படி வஞ்சிப்பதற்கு விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

தன்னுடைய இறுதி படமான ஜனநாயகனை தயாரித்ததோடு, திரையுலகிலிருந்து தனக்கு பிரியா விடை கொடுக்கும் நிகழ்வை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்தியதற்காக வெங்கட் கே நாராயணா அவர்களுக்கு தமிழக அமைச்சருக்கு இணையான பதவியை வழங்கி அழகு பார்த்திருக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான பாலமாக இருந்து, தமிழகத்தின் கோரிக்கைகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் அதிமுக்கியத்துவமிக்க பதவியான டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டிய அவசியம் என்ன என்பதை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழக மக்களுக்கு விளக்கியே ஆக வேண்டும்.

எனவே, மக்கள் தேர்ந்தெடுத்தது மக்களுக்கான நல்லாட்சியை வழங்கத்தானே தவிர, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருக்கமானவர்களுக்கும் அரசு உயர் பதவியைத் தூக்கிக் கொடுத்து அழகு பார்ப்பதற்கு அல்ல என்பதை இனியாவது உணர்ந்து, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக வெங்கட் கே நாராயணா நியமனம் செய்யப்பட்ட உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் விஜய்யை வலியுறுத்துகிறேன்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.

காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.

ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை

கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் மேகதாது, காவிரி பிரச்னைகளில் எப்படி தமிழ்நாட்டுக்கு ஆதரவாக பேசுவார். அவர் என்ன செய்ய போகிறார்? நடுநிலையாக செயல்பட முடியுமா?

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share