சென்னையில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான மாணவர் போராட்டத்தில் (Neet Protest), தம்மை விஜய் ரசிகை (Vijay Fan) என அறிவித்துக் கொண்டு பேசிய நடிகை சனம் ஷெட்டி விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீட் தேர்வை ஒழிக்க வேண்டும்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராடி வருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தரில் நீடிக்கும் போராட்டத்தைப் போலவே சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்திலும் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க நடிகை சனம் ஷெட்டி நேற்று ஜூலை 24-ந் தேதி சென்றார். அப்போது இயக்குநர் வெற்றி மாறனும் நீட் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்தார்.

அங்கு பேசிய நடிகை சனம் ஷெட்டி, ‘தம்மை விஜய் தீவிர ரசிகை; ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு வந்திருக்கிறேன்’ என பேச மாணவர்களும் இளைஞர்களும் கொந்தளித்து எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், நீட் எதிர்ப்பு போராட்டத்துக்கு எதிராக, இந்த போராட்டத்தை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்துகிறார்கள் எனவும் சனம் ஷெட்டி பேச பேச கடுமையாக எதிர்ப்பு எழுந்தது.
ஒரு கட்டத்தில் சனம் ஷெட்டியிடம் இருந்து மைக்கை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பறித்துவிட்டனர். இதனால் என்ன செய்வது என தெரியாமல் மேடையிலேயே சிறிது நேரம் நின்று மைக் இல்லாமலேயே கத்திக் கொண்டிருந்தார்.


ஒரு கட்டத்தில் வேறுவழியே இல்லாமல் அங்கிருந்து வெளியேறிய சனம் ஷெட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “எனக்கு இங்கே நடந்தது ஜனநாயகமே கிடையாது. அவ்வளவு பயமா இருந்தா என்னை ஏன் கூப்பிட்டாங்க? அவங்க இஷ்டத்துக்கு ஒரு நேரேட்டிவ் செட் பண்ணுவாங்க.. விஜய் சார் Missing-னு ஒருத்தர் போஸ்டர் பிடிக்கிறாரு.. அதுல எனக்கு உடன்பாடு இல்லை.. விஜய் சார் பேசலைன்னா அவரை போய் கேளுங்க.. சிஎம் சார் என் வீட்டுலயா உட்கார்ந்திருக்கிறாரு?” என ஆவேசமாக கேள்வி எழுப்பிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
