உலகப் பெரும் கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள் பலர் கூட தங்கள் பிறந்த நாளை ஒன்பது மணிக்கு கொண்டாடி விட்டு பத்தரை மணிக்கு ஆபீஸ் போய் விடுவது உண்டு. அப்புறம் இரவில் ஒரு பார்ட்டி. அடுத்த நாள் முதல் வேறு வேலை. அப்புறம் 364 அல்லது 365 நாட்கள் கழித்துதான் அடுத்த பிறந்த நாள்.
அரசியல்வாதிகள் ஒரு வாரம் அல்லது ஒரு மாசம் கூடக் கொண்டாடுவார்கள். நூற்றாண்டு விழாக்கள் ஒரு வருடம் கொண்டாடப்படுவதும் இயல்புதான்.
சினிமாக்காரர்களும் குறைவான நாட்களில் அதிகமான சம்பவங்களோடு பிறந்தநாள் கொண்டாட்டங்களில் அசத்துவார்கள். குறிப்பிட்ட தேதியில் அவர்கள் படம் ஏதும் ரிலீசானால் டபுள் தமாகா தான்.
இவர்களில் இருந்து மிகவும் வித்தியாசப்படும் சினிமாக்காரர்கள் ஒரு சிலரில் நடிகர் வையாபுரியும் ஒருவர். கோவிலுக்குப் போய்விட்டு வந்து நண்பர்களின் வாழ்த்துகளை போனில் பெற்றுக் கொண்டு சிம்பிளாக பிறந்த நாளை முடித்து விடுகிறார். கடந்த 23 ஆம் தேதி அப்படிதான் கொண்டாடி இருக்கிறார் .
அது கூட அதிசயமில்லை. இதுவரை தனது ஒரு பிறந்த நாளில் கூட கேக் வெட்டிக் கொண்டாடியதே இல்லையாம் வையாபுரி.
ஆடு மாடு வெட்டிக் கொண்டாடறாங்க. அரிவாளை எடுத்து தேசியக் கொடி வடிவ கேக்கைக் கூட வெட்டிக் கொண்டாடிய ஆட்கள் உண்டு. அடுத்து மனுஷன் தான்.
ஆனால் வையாபுரியை யாரும் வையவே (திட்டவே) முடியாது அல்லவா?
ராஜ திருமகன்
