அஜித் தான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர். அஜித் இயல்பாக இருக்கிறாரா இல்லை பப்ளிசிட்டிக்குச் செய்கிறாரா என பல வருடங்களாக ஒரு விவாதம் போய்க்கொண்டே இருக்கிறது. வரப்பில் ஓடிய பாரதிராஜாவின் ஹீரோயின்கூட திரும்ப வந்துவிடக்கூடும். ஆனால், இந்த கேள்விக்கு விடையே கிடைப்பதில்லை. தற்போது இந்த லிஸ்ட்டில் சேர்ந்திருப்பவர், பிக் பாஸில் கலந்துகொண்ட ஜூலி என்கிற ஜூலியானா.
பிக் பாஸிலிருந்து முதலில் வெளியேற்றியபோது, சாலையிலேயே பரணியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் ஜூலி. அப்போது ட்ரெண்டிங்கில் இருந்தவர், பல வாரங்கள் கழித்து இப்போது மீண்டும் ட்ரெண்டிங்கில் வந்திருக்கிறார். இந்த முறையும் சாலை தான். ஆனால், ஓரமாக பஸ் ஸ்டாண்டில் நிற்கிறார். பேருந்துக்குக் காத்திருக்கும் ஜூலியைப் பார்ப்பவர்கள் அவருக்குக் கைகுலுக்கி வாழ்த்து தெரிவிப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள யூடியூப் வீடியோ தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
35 நொடிகள் மட்டுமே இருக்கும் அந்த வீடியோ 6 லட்சம் பார்வையாளர்களை நெருங்கிக்கொண்டிருந்தபோது, ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ஒரே களேபரமாகிப் போய்விட்டது. அந்த களேபரத்துக்குக் காரணம் வையாபுரி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட போட்டோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டிருந்தது தான்.

பிக் பாஸ் வீட்டுக்குள் கமல்ஹாசன் செல்வதாக இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான புரோமோ, நேற்றைய நிகழ்ச்சியின் இறுதியில் ஒளிபரப்பப்பட்டது. அந்த காட்சியில் உடுத்தியிருந்த அதே உடையுடன், வையாபுரி அவரது வீட்டு வாசலில் நிற்பது போல வெளியாகியிருக்கும் போட்டோ சமூக வலைதளங்கள் முழுவதிலும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
வையாபுரி, ஆரவ், சினேகன், ஹரிஷ் ஆகிய நால்வரும் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில், கமல்ஹாசன் ஹரிஷைக் காப்பாற்றிவிட்டார். எனவே, மீதமிருக்கும் மூவரில் வையாபுரியை வெளியே அழைத்து வருவதற்காகத்தான் கமல் உள்ளே சென்றிருக்கிறார் என்பது தெரிகிறது.
