கேரளாவில் மணப்பெண் ஒருவர் குண்டும் குழியுமான சாலைகளில் போட்டோஷூட் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருமணம் என்றாலே புகைப்பட கலைஞர்கள் முக்கிய இடத்தை பிடித்துவிடுவார்கள். ஏனென்றால் மணமக்கள் தங்களை விதவிதமாக போட்டோ எடுத்து கொள்ள விரும்புவார்கள்.
திருமண மண்டபம் மட்டுமல்லாது பல்வேறு பொது இடங்களிலும் போட்டோஷூட் நடத்துகிறார்கள்.
இந்நிலையில் கேரளாவில் குண்டும் குழியுமான சாலையில் போட்டோ சூட் நடத்தப்பட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குண்டும் குழியுமான சாலைகளால் கேரள மாநிலம் நிலம்பூர் அருகே உள்ள பூக்கோட்டு பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை அரசின் கவனத்திற்குக் கொண்டுசென்ற போது கனமழை காரணமாகச் சாலையில் குழிகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பூக்கோட்டு பகுதியைச் சேர்ந்த சுஜீஷா தனது ஊரில் குண்டும் குழியுமான சாலையில் மணப்பெண் அலங்காரத்துடன் போட்டோ எடுத்தது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

சுஜீஷா தனது திருமணத்திற்காக ஏற்பாடு செய்திருந்த ஏரோ வெட்டிங் கம்பெனி எனும் நிறுவனத்தைச் சேர்ந்த போட்டோகிராஃபர் ஆஷிக், இந்த யோசனையை அவருக்கு கூறியுள்ளார்.
இந்த போட்டோஷூட் குண்டும் குழியுமான சாலைகளுக்கு எதிரான நமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அமையும் என்பதால் இதனை இவர்கள் செய்துள்ளனர்.
அதன்படி சுஜீஷா குழிகளில் நீர் தேங்கியிருக்கும் ஒரு சாலையில் நின்று கொண்டு போட்டோ எடுத்துள்ளார்.
அந்த போட்டோஷூட் வீடியோவை ஏரோ வெட்டிங் கம்பெனி அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பதிவிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ பலரால் லைக் மற்றும் ஷேர் செய்யப்பட்டு வருவதால் வைரலாகி இருக்கிறது.
மேலும் இது அரசை எதிர்த்த ஒரு நூதன போராட்டம் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மோனிஷா
ஆம்னி பேருந்து கட்டணம்: முடிவே கிடையாதா? – புலம்பும் பயணிகள்!
