பல்வேறு பிரிவுகளில் 10 தேசிய திரைப்பட விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள தமிழ்த் திரையுலகக் கலைஞர்களுக்குத் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள “ராயன்” திரைப்படத்திற்குச் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதும், “கேப்டன் மில்லர்” திரைப்படத்திற்குத் தேசிய சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருதும், அப்படத்தில் நடித்த தனுஷிற்குச் சிறப்புப் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், “அமரன்” திரைப்படத்திற்காக ராஜ்குமார் பெரியசாமிக்குச் சிறந்த இயக்குநருக்கான விருதும், ஆர். கலைவாணனுக்குச் சிறந்த படத்தொகுப்புக்கான விருதும், ஜி. வி. பிரகாஷ் குமாருக்குச் சிறந்த பின்னணி இசைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், “மகாராஜா” திரைப்படத்திற்காக அனல் அரசுக்குச் சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருதும், அப்படத்தில் நடித்த சச்சனா நமிதாஸிற்குச் சிறந்த துணை நடிகை விருதும், “மெய்யழகன்” திரைப்படத்திற்காகச் சுரேன் ஜிக்குச் சிறப்புப் பிரிவில் சிறந்த ஒலிக்கலவைக்கான விருதும், “ப்ளூ” குறும்படத்திற்காக டி. எஸ். ஹரிஹர சுதனுக்குச் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் திரையுலகம் 10 தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளதைப் பெருமைக்குரியதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், வருங்காலங்களில் தமிழ்த் திரையுலகம் மேலும் பல விருதுகளைப் பெற்றிடத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
