நேபாள பேரழிவு பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-த்தை கடந்துள்ளது; இப்பேரிடரில் சிக்கிய 3,000-க்கும் அதிகமானோர் நிலைமை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
நேபாள பேரழிவு பெருவெள்ளத்துக்கு பல்வேறு காரணங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதன் விவரம்:
புவி வெப்பமயமாதல் மற்றும் பனிப்பாறை உருகுதல்
இமயமலைப் பகுதியில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. பேரழிவுக்கு முந்தைய 24 மணி நேரத்திலும் அப்பகுதியிலிருந்த பனி குறிப்பிடத்தக்க அளவில் உருகியிருந்ததாக செயற்கைக்கோள் படங்களின் தொடக்க நிலை ஆய்வு தெரிவிக்கிறது. இதனால் பனிப்பாறையின் உறுதித்தன்மை குறைந்திருக்கலாம்.
பனிப் பாறைக்கு அடியிலிருந்த பாறைத்தளத்தின் பலவீனம்
பனிப் பாறையைத் தாங்கியிருந்த அடிப்பாறைப் பகுதியும் சரிந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பாறைத்தளம் பலவீனமடைந்ததால் அதன் மீது அமைந்திருந்த பனிப்பாறையின் கீழ்ப்பகுதி நிலைகுலைந்து, மொத்தமாகப் பெயர்ந்து விழுந்திருக்கிறது.
சுமார் 50 ஏக்கர் பரப்பளவுள்ள பனிப்பாறை உடைந்தது
செயற்கைக்கோள் படங்களின் ஆரம்பகட்ட ஆய்வின்படி, சுமார் 0.2 சதுர கிலோமீட்டர் (அதாவது 50 ஏக்கர்) பரப்பளவுள்ள பனிப்பாறைப் பகுதி மலைச்சரிவிலிருந்து உடைந்து பிரிந்தது. பனி மட்டுமல்லாமல் அதனுடன் பாறைகள், மண் மற்றும் உருகிய நீரும் சேர்ந்து சரிந்தன.
17,000 அடி உயரத்திலிருந்து ஏற்பட்ட பெரும் சரிவு
கடல் மட்டத்திலிருந்து சுமார் 17,000 அடி உயரத்தில் நின்று கொண்டிருந்த 50 ஏக்கர் பரப்பளவுள்ள பனிப்பாறை திடீரென உடைந்தது. அங்கிருந்து சுமார் 1.2 கிலோமீட்டர் ஆழமான பள்ளத்தாக்கை நோக்கி அது செங்குத்தாகக் கீழே விழுந்தது. இவ்வளவு பெரிய உயரத்திலிருந்து விழுந்ததால் ஏற்பட்ட பயங்கரமான புவியீர்ப்பு விசையும் வேகமும், பனிப்பாறையின் எடையைப் பல மடங்காக அதிகரித்து, அந்தப் பேரழிவை மிகக் கோரமான ஒன்றாக மாற்றின.
பனிப்பாறைச் சரிவால் உருவான நில அதிர்வுச் சமிக்ஞை
முதலில் இது ரிக்டர் அளவில் 4.4 அலகுகள் கொண்ட நிலநடுக்கமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம், அது நிலநடுக்கம் அல்ல; பெருமளவிலான பனி மற்றும் பாறைகள் சரிந்ததால் பதிவான நில அதிர்வு என்று விளக்கியது. எனவே நிலநடுக்கம் பனிப்பாறையைச் சரிக்கவில்லை; பனிப்பாறைச் சரிவுதான் அதிர்வை உருவாக்கியது.
பனி, பாறை, மண் மற்றும் நீர் கலந்த ”பேரோட்டம்”
கீழே விழுந்த பனிப்பாறை பள்ளத்தாக்கிலிருந்த மண், கற்கள், பாறைகள், பனி உருகிய நீர் ஆகியவற்றையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டது. இதனால் அது சாதாரண பனிச்சரிவாக இல்லாமல், மிகுந்த எடையும் அழிக்கும் ஆற்றலும் கொண்ட பனி–பாறை–சேற்றுப் பேரோட்டமாக மாறியது.
லெண்டே ஆற்றில் உருவான தற்காலிக இயற்கை அணை
சரிந்த பனிப் பாறை, பாறை மற்றும் மண் குவியல்கள் லெண்டே ஆற்றின் இயல்பான நீரோட்டத்தைத் தடுத்தன. இதனால் ஆற்றின் குறுக்கே நிலையற்ற தற்காலிக இயற்கை அணை உருவாகி, அதன் பின்னால் பெருமளவு தண்ணீர் வேகமாகத் தேங்கியது.
தற்காலிக அணையின் திடீர் உடைப்பு
பனிப் பாறை மற்றும் பாறைகளால் உருவான தற்காலிக அணை, அதிகரித்த நீரழுத்தத்தைத் தாங்க முடியாமல் உடைந்தது அல்லது தண்ணீர் அதன் மேலாகப் பெருக்கெடுத்தது. தேங்கியிருந்த தண்ணீர் ஒரே நேரத்தில் வெளியேறியதால், பேரலை போன்ற திடீர் வெள்ளம் உருவானது.
குறுகிய, செங்குத்தான மலைப் பள்ளத்தாக்குகள்
லெண்டே ஆறு மற்றும் அதனுடன் இணையும் ஆறுகள் குறுகிய, செங்குத்தான இமயமலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்கின்றன. இதனால் வெள்ளநீர் அகலமாகப் பரவாமல் ஒரே பாதையில் குவிந்து அதிவேகமாகப் பாய்ந்தது. பாறைகள், மரங்கள் மற்றும் கட்டடக் கழிவுகளையும் சுமந்துகொண்டு சென்ற வெள்ளம், பின்னர் போதேகோசி மற்றும் திரிசூலி ஆற்றுப் பகுதிகளையும் தாக்கியது.
ஆற்றங்கரைக் குடியிருப்புகள்
எல்லை நகரங்கள், கிராமங்கள், சாலைகள், பாலங்கள், நீர்மின் நிலையங்கள் மற்றும் தொழிலாளர் முகாம்கள் ஆற்றங்கரையிலும் குறுகிய பள்ளத்தாக்குகளிலும் அமைந்திருந்தன. வெள்ளம் மிக வேகமாக வந்ததால் மக்களுக்கு வெளியேறுவதற்குப் போதிய நேரம் கிடைக்கவில்லை. முன்னெச்சரிக்கைத் தகவல் பரிமாற்றத்திலிருந்த குறைபாடுகளும் பேரழிவின் உயிரிழப்பு மற்றும் சேதத்தை அதிகரித்தன.
