பிரபல யூடியூபர் இர்பானின் ஆடம்பர சொகுசு கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 30.69 லட்சம் இழப்பீடு வழங்கச் சிறு வழக்குகள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி அருகே உள்ள கோனாதி முரளி நகரைச் சேர்ந்தவர் பத்மாவதி. இவர் பொத்தேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பாதுகாப்புக் காவலராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி, பணி முடிந்த பிறகு மறைமலைநகரில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்றுவிட்டு, மீண்டும் பொத்தேரியில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்புவதற்காக மறைமலைநகர் ஜி.எஸ்.டி. சாலையைக் கடந்தபோது, அதிவேகமாக வந்த ஆடம்பரச் சொகுசு கார் ஒன்று பத்மாவதி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல்துறையினரின் விசாரணையில், அது யூடியூபர் இர்பானின் கார் என்பதும், அவரது ஓட்டுநர் அசாருதீன் என்பவர்தான் காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தினார் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், கார் ஓட்டுநரின் அலட்சியத்தால் இந்த விபத்து நேரிட்டதாகக் கூறி, பத்மாவதியின் மகன் பிரகாஷ் செங்கல்பட்டு சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உயிரிழந்த பத்மாவதியின் குடும்பத்திற்கு ரூ. 30.69 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். காரின் காப்பீட்டு நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பு இந்த நிவாரணத் தொகையை உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
