தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 20) 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகிற 22-ந்தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று, வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 20) சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர் அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,விழுப்புரம் , திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
