இல்லத்தரசியாகவும் யூடியூபராகவும் இருக்கும் ஒரு பெண், தனது தங்க நகைகள், பணம் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வீடியோவாக வெளியிட்ட நிலையில், அது அவருக்கு ஆபத்தை தேடி தந்துள்ளது.
இன்றைய சமூக ஊடக உலகில் நெட்டிசன்கள் கன்டென்ட் கிடைத்தால் போதும் என எதை வேண்டுமானாலும் வீடியோவாக வெளியிடுகின்றனர்.
அந்த வகையில் ஹோம் டூர், பிரிட்ஜ் டூர் என தங்களது வாழ்க்கை முறையை வீடியோவாக காட்சிபடுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தான் மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில், இல்லத்தரசியாகவும் யூடியூபராகவும் இருக்கும் ரச்சனா குர்ஜார், தனது தங்க நகைகள், பணம் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்தினார்.
இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை அதிகாலையில், அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் மோகனி கிராமத்தில் உள்ள யூடியூபர் ரச்சனா குர்ஜாரின் வீட்டிற்குள் புகுந்து, அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஒரு அறைக்குள் பூட்டிவிட்டு, தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பணம் மற்றும் ஒரு அட்டைப்பெட்டி முழுவதும் இருந்த எனர்ஜி டிரிங்க் ஆகியவற்றை திருடி கொண்டு தப்பியோடியுள்ளனர். திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 8 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்த சிசிடிவியில் தங்கள் முகம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக திருடர்கள் அதையும் மாற்றி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நிச்சயமாக இந்த பகுதியைச் சேர்ந்த கொள்ளையர்கள் தான் கொள்ளை அடித்திருக்க வேண்டும் என்று சிவபுரி ஏஎஸ்பி சஞ்சீவ் கூறியுள்ளார்.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்களை கொண்டுள்ள ரச்சனா குர்ஜார், சமீபத்தில் தனது வீடு, நகைகள், பணம் மற்றும் வாழ்க்கை முறையைக் காட்டும் வீடியோக்களைப் பதிவிட்டிருந்தார்.
ஒரு வீடியோவில், அவர் தனது வீட்டின் நுழைவாயில் முதல் அறைகள் வரை பல்வேறு பகுதிகளைப் பதிவு செய்திருந்தார்.
மற்றொரு வீடியோவில், நகைகள் மற்றும் பணம் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களை ஒரு மேஜை மீது வைத்து அதைப் படம் பிடித்து காட்டியிருந்தார்.
கொள்ளையர்கள் இந்த வீடியோக்களைப் பார்த்துவிட்டு, அதன் மூலமே இக்கொள்ளைச் சம்பவத்தைத் திட்டமிட்டிருக்கலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் கருதுகின்றன.
தனது ஆடம்பரத்தை காட்டி ஹோம் டூர் வெளியிட்டது குற்றம் செய்வதற்கான ரூட் மேப்பாக மாறி இருக்கிறது.
தற்போது, சிசிடிவி காட்சிகளில் காணப்படும் முகமூடி அணிந்த நபர்களை அடையாளம் காண காவல்துறையினர் முயன்று வருகின்றனர்.
அதே வேளையில் இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் ஆடம்பரத்தையோ அல்லது வீட்டின் உட்புற வடிவமைப்பையோ காட்சிப்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்த கடுமையான எச்சரிக்கையை எழுப்பியுள்ளது.
