முந்தைய காலகட்டத்தில் தொற்று நோய் என்பது தான் மனிதர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் மனிதர்களுக்கு குறிப்பாக இந்தியாவை பொறுத்தமட்டில் தொற்று அல்லாத நோய்கள் தான் நோயாளிகளுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அதிலும் முக்கியமான நோய் என்று பார்த்தால் அது சர்க்கரை நோய் தான். world diabetes day interview with doctor bharanidharan
ICMR-ன் அறிக்கையின் படி இந்தியாவில் சுமார் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 13 கோடிக்கும் அதிகமானோர் Pre Diabetes என்று சொல்லக்கூடிய சர்க்கரை நோயின் ஆரம்ப கட்ட நிலையில் இருக்கின்றனர்.

இந்திய மக்களை ஆட்டிப்படைக்கும் இந்த சர்க்கரை நோயை எப்படி குணப்படுத்துவது? ஒருவேளை சர்க்கரை நோய் வந்துவிட்டால் பிறகு அதை முழுமையாக குணப்படுத்த இயலுமா? என்பது குறித்து அறிந்து கொள்ள சென்னையின் முதன்மை மருத்துவமனைகளில் ஒன்றான காவிரி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் பரணிதரன் அவர்களிடம் உரையாடினோம். நம்முடைய கேள்விகளையும் அதற்கு மருத்துவர் பரணிதரன் அளித்த பதில்களையும் கீழே காணலாம்.
இந்திய மக்களுக்கு சர்க்கரை நோய் அதிகமாக வருவதற்கான காரணம் என்ன?
இந்தியாவில் சர்க்கரை நோய் அதிகமாக இருப்பதற்கான காரணம் உணவுமுறை மாற்றமே. சரியாக உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல், உடல் பருமன், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக உள்ளன. சுற்றுப்புறச்சூழல் மற்றும் உணவு முறை மாற்றத்தின் காரணமாக உடலில் இன்சுலின் சுரத்தல் வேறுபடுகிறது. இந்த வேறுபாடு உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியாமல் செய்கிறது.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த எந்த மாதிரியான உணவுகளை நாம் எடுத்து கொள்ளலாம்?
ஆரோக்கியமான உணவு முறை அத்தியாவசியமானது. மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து மூன்றையும் நாம் தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
வெள்ளை சர்க்கரை உட்கொள்வதால் மட்டுமே சர்க்கரை நோய் வருகிறது என்று கூறப்படுகிறது. அதற்கு மாற்றாக பனை வெல்லம், நாட்டு சர்க்கரை எடுத்து கொள்வதால் பலன் உண்டா?
வெள்ளை சர்க்கரை, நாட்டு சர்க்கரை, பனை வெல்லம் என எதை எடுத்துக் கொண்டாலும் அவற்றில் இருப்பது குளுக்கோஸே. வெள்ளை சர்க்கரையை தவிர்ப்பதற்காக நாட்டு சர்க்கரை எடுப்போமேயானால் அதிலும் குளுக்கோஸ் இருக்கிறது. அது சரியான முறை கிடையாது. சர்க்கரை நோய் இருப்பவர்கள் அனைத்து விதமான சர்க்கரைகளையும் தவிர்ப்பதே நல்லது.

சர்க்கரை நோய் முதல் தலைமுறைக்கு இருந்தால் அது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் வரும் என்பது உண்மை தானா? அதனை தவிர்க்க நாம் என்ன செய்யலாம் ?
பரம்பரை தன்மையின் மூலமாக சர்க்கரை நோய் வர அதிக வாய்ப்புள்ளது. பெற்றோரில் யாரேனும் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால் அவர்களின் குழந்தைக்கு சர்க்கரை நோய் வருவதற்கு சுமார் 60% வாய்ப்புள்ளது. பெற்றோரில் இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்தால் அவர்களின் குழந்தைக்கு 80% சதவிகிதம் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் பரம்பரை தன்மை மட்டுமே சர்க்கரை நோய்க்கான காரணம் என்று நாம் ஒரேயடியாகவும் சொல்ல முடியாது.
அதேபோல குழந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோய் டைப் 1 எனப்படும். இது குழந்தைகளுக்கு ஏதேனும் காய்ச்சலோ அல்லது நோய் தொற்றோ ஏற்படும் போது, அவர்கள் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி ஆன்டிபாடிகள் இன்சுலின் உற்பத்தி செய்யக்கூடிய பீட்டா செல்களை அழிப்பதால் இவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இதனால் இந்த குழந்தைகள் தங்களது வாழ்நாள் முழுவதும் இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதனை முழுமையாக சரி செய்ய முடியுமா?
நாங்கள் படிக்கும் காலகட்டத்தில் சர்க்கரை நோய் வந்தால் அதை முழுமையாக சரிப்படுத்த முடியாது என்ற நிலை இருந்தது. ஆனால் இன்று மருத்துவத்துறை அளப்பரிய வளர்ச்சியை எட்டியுள்ளது.
சர்க்கரை நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டால் முழுமையாக நாம் அதை குணப்படுத்த முடியும். முறையான உணவு பழக்க வழக்கமும், உடற்பயிற்சியும் மேற்கொண்டால் அவர்கள் கணையத்தில் உற்பத்தியாகும் இன்சுலின் உற்பத்தி சரியான முறையில் வேலை செய்ய தொடங்கிவிடும்.
மாவுச்சத்தை வைத்துவிட்டு உடலுக்கு தேவையான புரதச்சத்தையும் கொழுப்பு சக்தியும் அதிக அளவில் எடுத்துக்கொண்டு லோ கலோரி டயட் பின்பற்றினால் மூன்று மாதத்தில் சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்தலாம். நோயை கண்டறிந்த உடனேயே மருத்துவரை அணுகி உரிய முறையில் சிகிச்சை மேற்கொண்டால் சர்க்கரை நோயையும் அதனால் வரக்கூடிய விளைவுகளையும் நாம் தடுக்கலாம்.

நாம் சென்று கொண்டிருக்கும் போது வழியில் யாராவது திடீரென மயக்கம் போட்டு விழுந்தால் அவருக்கு முதலில் கொடுப்பது சர்க்கரையே. சர்க்கரை அளவு குறைவாக உள்ளதா? அல்லது அதிகமாக உள்ளதா? என அறியாமல் சர்க்கரை கொடுப்பது சரிதானா?
ஒருவர் திடீரென மயக்கம் போட்டு விழுந்தால் அவருக்கு சர்க்கரை அளவு குறைவாக உள்ளதா? இல்லை அதிகமாக உள்ளதா? என்று நமக்கு தெரிய வாய்ப்பில்லை. சர்க்கரை அதிகமாக உள்ளவர்களுக்கும், குறைவாக உள்ளவர்களுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகளே காணப்படும்.
எனவே ஒருவர் மயங்கி விழுந்தால் முதலில் சர்க்கரை குறைவாக உள்ளவர்களுக்கான சிகிச்சை அளிக்க வேண்டும். அந்த நேரத்திற்கு நாம் சர்க்கரையை கொடுத்தாலும் உடனடியாக விரைந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
சர்க்கரை நோய் வராமல் தடுக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?
மனிதர்கள் நோய் வந்த பிறகு தான் அதில் அக்கறை செலுத்துகிறோம். ஆனால் நோய் வருவதற்கு முன்பே அது வராமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக முறையான உணவு பழக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றை தொடர்ந்து செய்வதன் மூலம் நோய்வாய்ப்படுவதில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். world diabetes day interview with doctor bharanidharan
சந்திப்பு : தமிழ் முல்லை
தொகுப்பு : சண்முக பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
