தமிழகத்தில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருகிறது. வரும் மே 4ம் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்குவதால் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக் என கூடும் என கூறப்படுகிறது. வரும் மே 3ம் தேதி வரை கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அசௌகரியம் ஏற்பட கூடும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஏப்ரல் 29) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழத்தில் ஓரிரு இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2° செல்சியஸ் வரை உயர்ந்தும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது. திருச்சி விமான நிலையத்தில் அதிகபட்சமாக 40.5° செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. குறைந்த பட்ச மாக சமவெளிப்பகுதிகளில் அரியலூரில் 24.0° செல்சியஸ் வெப்பநிலையும், மலைப்பகுதிகளில் கொடைக்கானலில் 11.7° செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:
29-04-2026 முதல் 03-05-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
29-04-2026 முதல் 03-05-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
29-04-2026 முதல் 03-05-2026 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
