மாம்பழங்களை ரசாயனங்களை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைத்தால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடைக்காலம் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது மாம்பழங்கள் தான். முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். நமது நாட்டின் தேசியக் கனியான மாம்பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று.கோடை காலம் தொடங்கிய நிலையில் மாம்பழங்கள் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை சேலம் மாம்பழத்திற்கு தனிச் சிறப்பு இருந்தாலும், பல்வேறு மாவட்டங்களில் மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் உள்ளன.
இந்நிலையில், அதிக லாபத்திற்காக ரசாயனங்களைப் பயன்படுத்தி மாம்பழங்களைப் பழுக்க வைப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு, இந்த விதிமீறல்களைத் தடுக்க உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
மாம்பழங்களை ரசாயனம் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்தால் ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மாம்பழத்தின் நன்மைகள்:
165 கிராம் மாம்பழத்தில் தோராயமாக 99 கலோரிகள் உள்ளன. இதில் 1.4 கிராம் புரதம், 0.6 கிராம் கொழுப்பு, 24.8 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 2.6 கிராம் நார்ச்சத்து உள்ளது.
மேலும் வைட்டமின் A மற்றும் C, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தாமிரம் (Copper) ஆகியவற்றின் மிகச் சிறந்த ஆதாரமாக மாம்பழம் விளங்குகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது மற்றும் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
