பாஜகவில் இருந்து மாநில துணை தலைவர் கரு நாகராஜன் விலகியுள்ளார்.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி, புதிய இயக்கத்தை தொடங்கியிருக்கிறார். இந்தசூழலில் இன்று மாலை டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார்.
அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகிய நிலையில், அவரது ஆதரவாளர்களும் பாஜகவில் இருந்து விலகி வருகின்றனர்.
அந்தவகையில் பாஜக துணை தலைவர் கரு நாகராஜன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவருடன் சேர்ந்து மேலும் சிலரும் பாஜகவில் இருந்து விலகினர்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”மற்ற எந்தத் தலைவர்களையும் நான் குறை சொல்ல விரும்பவில்லை. ஆற்றல்மிக்க தலைவராக, குக்கிராமங்கள் வரை பிஜேபியைக் கொண்டு சென்ற ஒரு தலைவராக அண்ணாமலை விளங்கிய காரணத்தினால்தான்… அவருக்கு ஒரு சிறப்புத் தன்மை, சிறப்புச் சக்தி, சிறப்பு ஆற்றல் இருக்கிற காரணத்தினால்தான்… அவரை நாங்கள் ஆதரிக்க முடிவு செய்து, இன்றிலிருந்து, கட்சியிலிருந்து ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை இப்பொழுது தலைவருக்கு அனுப்ப இருக்கிறோம். விமான நிலையத்திலே அவருக்கு வரவேற்பு அளிக்கக்கூடிய ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அங்கே வருகிறார்கள். அவர்களோடு நாங்களும் சென்று வரவேற்பு அளிக்க இருக்கிறோம் என்பதையும் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
அவரிடம் விஜய்யை எதிர்த்து இந்த அரசியல் இருக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர், ”விஜயை எதிர்த்து அரசியல் இருக்காது. ஆனால், விஜய் ஆட்சியை எதிர்த்து இருக்கலாம் இல்லையா? இன்றைக்கு எல்லா கட்சியும் அதைத்தான் செய்வாங்க. இந்த ஆட்சியில் நடக்கிற தவறுகளைச் சுட்டிக்காட்டுவது ஜனநாயகக் கடமை. அது மற்றவர்களை விட ஜனநாயகக் கடமை, அந்த ஆற்றல் அண்ணாமலைக்கு அதிகமாகவே இருக்கிறது.
தனிப்பட்ட விஜய் அல்ல, அவருடைய ஆட்சியில் நடக்கிற தவறுகளை நிச்சயமாக அவர் சுட்டிக்காட்டுவாஅவர் இன்னும் கொஞ்சம் மாற்றமாக, இளைஞர்களோடு இணைந்து ஒரு அரசியல் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். வழக்கமா ஒரு வேட்டி, சட்டை போட்டுட்டு, ஒரு 50 பேரு பின்னாடி நடக்க, முன்னாடி போக அப்படிலாம் இல்லாம … ஒரு சாதாரண சாமானியனா நம்மளோடு எழுந்து, எல்லாரோடும் இணைந்து செயல்படப் போறார்னு நான் நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
