2026 யூனியன் பட்ஜெட் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களும் பட்ஜெட் வரலாறும்..!
யூனியன் பட்ஜெட் 2026–27 நெருங்கி வருவதால் சன்சாத் பவன் மற்றும் நார்த் பிளாக் ஆகிய இடங்களில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரி மற்றும் செலவின அறிவிப்புகளுக்காக பட்ஜெட் பரவலாக அறியப்பட்டாலும் இது ஒரு முறையான அரசியலமைப்பு செயல்முறை மற்றும் நீண்டகால மரபுகளையும் உள்ளடக்கியது. இவை ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் எவ்வாறு தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது என்பதை வழிநடத்துகின்றன.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 112-ன் கீழ், யூனியன் பட்ஜெட் அதிகாரப்பூர்வமாக ‘ஆண்டு நிதி அறிக்கை’ (Annual Financial Statement) என்று அழைக்கப்படுகிறது. இது வரவிருக்கும் நிதியாண்டுக்கான அரசின் வருவாய் மற்றும் செலவினங்களின் மதிப்பீடுகளை முன்வைக்கிறது. வருமான வரி மற்றும் வரிகள் தொடர்பான விஷயங்களை வருவாய் துறை கவனித்துக் கொள்ளும்.
அதே சமயம், பணம் எவ்வாறு செலவிடப்படும் என்பதை செலவினத் துறை தீர்மானிக்கிறது. இந்த இரண்டு துறைகளும் இணைந்து நாட்டின் நிதித் திட்டமாக யூனியன் பட்ஜெட் செயல்படுகிறது. இது பொருளாதார வளர்ச்சி, நலத்திட்டங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அரசு நிதியை எவ்வாறு பயன்படுத்தும் என்பதைக் காட்டுகிறது.
இந்தியாவில் பிப்ரவரி 1 அன்று பட்ஜெட் சமர்ப்பிக்கப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. ஏப்ரல் 1 அன்று புதிய நிதியாண்டு தொடங்குவதற்குள் விவாதம், ஒப்புதல் மற்றும் செயலாக்கத்திற்கு போதுமான நேரம் இருப்பதை இது உறுதி செய்கிறது. இந்த கால இடைவெளி, அரசுத் துறைகள் எந்தவித தாமதமும் இன்றி கொள்கைகளைத் தயாரித்து செயல்படுத்த உதவுகிறது. இதற்கு முன்பு, பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில் பட்ஜெட் சமர்ப்பிக்கப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால், 2017ஆம் ஆண்டில் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இந்த தேதியை மாற்றினார்.
நிதியாண்டின் தொடக்கத்திலிருந்தே அமைச்சகங்கள் தங்கள் திட்டங்களையும் செலவினங்களையும் செயல்படுத்த அதிக நேரம் கிடைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டது. சன்சாத் பவனில் இருந்து யூனியன் பட்ஜெட் நேரலையாக சன்சாத் டிவியில் (Sansad TV) ஒளிபரப்பப்படுகிறது.
இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்கள் நிதியமைச்சரின் உரையை நிகழ்நேரத்தில் பார்க்கலாம். பட்ஜெட் உரை பொதுவாக காலை 11 மணிக்குத் தொடங்கி சுமார் 1 மணி வரை நீடிக்கும். உரைக்குப் பிறகு, பல சேனல்கள் மற்றும் தளங்கள் நிபுணர்களின் கலந்துரையாடல்களை நடத்துகின்றன. இதில் முக்கிய அறிவிப்புகள், பெரிய நன்மைகள் மற்றும் கவனிக்க வேண்டிய பகுதிகள் குறித்து விரிவாக விளக்கப்படும்.
மேலும், அரசு தனது இணையதளத்திலும், யூனியன் பட்ஜெட் மொபைல் செயலி மூலமாகவும் அதிகாரப்பூர்வ பட்ஜெட் ஆவணங்களை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடுகிறது. அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலாக இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
