தமிழ்நாடு முதல்வராக சி. ஜோசப் விஜய் இன்று மே 10-ந் தேதி பதவியேற்றார். இந்த விழாவின் தொடக்கத்தில் மரபுகளுக்கு மாறாக முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. அதேபோல நிகழ்வின் முடிவில் மரபுகளுக்கு மாறாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது.
பொதுவாக தமிழ்நாடு அரசின் நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் மட்டும் பாடப்படும். நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்படும். ஆனால் தமிழ்நாடு அரசு விழாவில் முதல் முறையாக 2 முறை வந்தே மாதரம் என்ற பாடல் பாடப்பட்டுள்ளது.
வந்தே மாதரம் பாடலின் பின்னணி தொடர்பாக திராவிடர் விடுதலை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் எழுதிய கட்டுரை ( பெரியார் முழக்கம் – ஆகஸ்ட் 2006):
மேற்கு வங்கத்தின் பக்கிம் சந்திர சட்டர்ஜி 1880-ல் ‘ஆனந்த மடம்’ என்று ஒரு நாவலை வங்காள மொழியில் எழுதினார். அந்த நாவலில் வரும் வங்காள மொழிப் பாடல்தான் ‘வந்தே மாதரம்’.
அந்த நாவல் உருவான காலக்கட்டத்தில் இந்தியாவின் சில பகுதிகளில் ஆட்சி செய்துக் கொண்டிருந்த முஸ்லிம் மன்னர் அநுமன், ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியினருடன் சில சமாதான ஒப்பந்தங்களை செய்து கொண்டு சென்னை – பம்பாய் – கல்கத்தா போன்ற நகரங்களில் காலூன்ற முயன்று கொண்டிருந்தனர்.
இந்த ‘ஆனந்த மடம்’ நாவலில் சொல்லப்பட்ட செய்தி, ஆங்கிலேயர்களை எதிர்க்க வேண்டும் என்பது அல்ல; மாறாக முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியை – ஆயுதப் போர் நடத்தி ஒழித்துவிட்டு இந்து – ஆங்கிலேயர்களின் கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே இந்த நாவலின் மய்யக் கருத்து.
வைணவ இந்து இளைஞர்கள் – ஆயுதம் தாங்கிப் போராட வேண்டும் என்பதே கதையின் கரு. இந்த வைணவர்களின் தலைவராக சுவாமி சத்யானந்தா என்று ஒரு துறவியும் – அவரது சீடராக குரு. கபவானந்தா என்ற வீரமிக்க இளைஞரும் இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள். இந்த பவானந்தா – இந்து இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு முஸ்லிம்களை எதிர்த்துப் போராட ஆயுதப் பயிற்சி அளிக்கிறான். (இவைகள் வரலாறு அல்ல; கதையில் வரும் கற்பனை)
பவானந்தா – அப்படி திரட்டும் இளைஞர்களிடம் பாடும் பாடலே ‘வந்தே மாதரம்’. இதன் பொருள் இதுதான். “நம்முடைய நோக்கம் நமது தாய் நாட்டை விடுவிப்பதேயாகும். நம்முடைய இனம், மதம், பண்பாடு, பெருமை ஆகிய அனைத்துமே முஸ்லிம்கள் ஆட்சியில் பேராபத்துக்கு உள்ளாகிவிட்டது. நாம் முஸ்லிம்களை ஒழிக்காவிட்டால், நமது தர்மத்துக்கு எதிர்காலமே இல்லை. ஏழு கோடி இந்துக்களாகிய நாம் வாளேந்தி களத்தில் குதித்தால்… அது ஒன்றே போதும் நமது மண்ணின் பெருமையை மீட்க” – இதுதான் ‘வந்தே மாதரம்’ பாடலின் பொருள்.
ஆனந்த மடத்துக்குள் ‘விஷ்ணு’வின் மடியில் பலவீனமாக இந்திய மாதா படுத் திருக்கும் படத்தைப் பார்த்து – வைணவ இளைஞர்கள் ‘வந்தே மாதர’த்தை முழங்கி – முஸ்லிம்கள் மீது ஆயுதமேந்தி போரிடுகிறார்கள். பல முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். முஸ்லிம் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். எல்லாவற்றையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு காளிதேவியின் முன் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்.
“நாம்தான் முஸ்லிம்களை ஒழித்துவிட்டோமே, ஆனாலும் இந்துராச்சியம் வரவில்லையே! ஆங்கிலேயர்கள் அல்லவா தொடர்ந்து நம்மை ஆளுகிறார்கள்?” என்று இளைஞர்கள் சத்யானந்தாவிடம் கேட்க – அவர் கூறுகிறார்: “இப்போது நமக்கு எதிரிகள் யாருமில்லை. ஆங்கிலேயர்கள் நம்முடைய நண்பர்கள். அவர்கள் தங்கள் அதிகாரங்கள் அனைத்தையும் விஷ்ணு கடவுளுக்கே காணிக்கையாக்கியிருக்கிறார்கள்” என்கிறார். சத்யானந்தாவின் இந்தப் பேச்சோடு கதை முடிகிறது.
காங்கிரசில் உள்ள இந்து வெறி பார்ப்பன சக்திகள் – காங்கிரஸ் கூட்டங்களில் இந்தப் பாடலைப் பாடி வந்தார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1939 ஆம் ஆண்டு முஸ்லிம் லீக் தீர்மானம் நிறைவேற்றியது. 1905-ல் வங்காளம் பிரிக்கப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் இந்தப் பாடல் முக்கியத்துவம் பெற்றது. அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் நிர்வாகம் இந்தப் பாடலுக்கு தடை விதித்தது.
முஸ்லீம்களைப் புண்படுத்தும் பாடலாக இருந்ததால், காந்தியாரும் இந்தப் பாடல்களைப் பாட அனுமதிக்க மறுத்து வந்தார்.
1946 – 47-ல் ‘வந்தே மாதரத்தை’ தேசிய கீதமாக்க முயற்சி நடந்தும், முஸ்லிம்கள் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது.
கவிஞர் இக்பாலுடைய ‘சாரே ஜஹான் சே அச்சா’ என்ற – இந்தியா முழுவதும் உணர்ச்சிகரமாகப் பாடப்பட்ட பாடலை, தேசிய கீதமாக வைப்பதற்கு ‘இந்து’க்கள் எதிர்த்தார்கள். காரணம் – எழுதிய கவிஞர் ஒரு முஸ்லிம் என்பதால். பிறகுதான் ‘ஜனகனமண’ பாடல் தேசிய கீதமானது.
முஸ்லிம்களை எதிர்த்து ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து இந்து ஆட்சியை உருவாக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டது தான் ‘வந்தே மாதரம்’, அது ஆங்கிலேயரை எதிர்த்த தேச பக்திப் பாடல் அல்ல; அதன் காரணமாகத்தான், ‘ஆனந்த மடம்’ ஏனைய மொழிகளில் மொழி பெயர்க்கப்படவில்லை; பாடத் திட்டங்களில் இடம் பெறவில்லை. இவ்வாறு விடுதலை ராஜேந்திரன் எழுதியுள்ளார்.
இத்தகைய சர்ச்சைக்குரிய பாடல்தான் இன்று விஜய் பதவியேற்பு விழாவில் பாடப்பட்டது.
