இனி 2 நாட்கள் வொர்க் ஃப்ரம் ஹோம்… உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு!

Published On:

| By Kavi

மத்திய அரசின் எரிபொருள் சிக்கன நடைமுறைக்கு ஏதுவாக உச்ச நீதிமன்றமும் பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

எரிபொருள் தேவையை குறைக்குமாறு பொதுமக்களை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

ADVERTISEMENT

பிரதமர் மோடி வொர்க் ஃப்ரம் நடைமுறையை பின்பற்றலாம் என்று அறிவுறுத்தி இருந்தார். 

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் எரிசக்தி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மத்திய அரசு இதுபோன்ற  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

ADVERTISEMENT

எரிபொருள் சிக்கன நடவடிக்கைக்காக, பிரதமர் மோடியின் கான்வாய்கள் குறைக்கப்பட்டன. 

இந்நிலையில் பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று எனது இந்தியா எனது பங்களிப்பு என்ற திட்டத்தின் கீழ் டெல்லி அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்தது.. 

ADVERTISEMENT

அதன்படி ஐடி நிறுவனங்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையை பின்பற்றுமாறு டெல்லி அரசு அறிவுறுத்தியது. 

அரசு ஊழியர்கள் வாரத்துக்கு இரண்டு நாட்கள் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் என்றும் வாரம் ஒரு முறை கார் பயன்படுத்தாத நாளாக கடைபிடிக்க வேண்டும் என்றும், வாரம் ஒரு நாள் அனைவரும் மெட்ரோ போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிக்க வேண்டும் எனவும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார். 

இந்த சூழலில் உச்ச நீதிமன்றமும் எரிபொருள் சிக்கன நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

இன்று உச்ச நீதிமன்றத்தின் ஜெனரல் செகரட்டரி பாரத் பராசர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘அமெரிக்கா ஈரான் மோதலைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை மே 12 2026 அன்று வெளியிட்ட அலுவலக குறிப்பாணையின் படி, கீழ்க்கண்ட நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகிறது. 

திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகள்  இனி நேரில் ஆஜராக வேண்டியதில்லை. 

திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகள் விசாரிக்கப்படும் வழக்குகள் உட்பட இதர வழக்குகள் பட்டியலிடும் நாட்கள் மற்றும் நீதிமன்றத்தின் பகுதி நேர நாட்களில் விசாரிக்கப்பட வேண்டிய அனைத்து வழக்குகளும் மறு உத்தரவு வரும் வரை இனி காணொளி காட்சி வாயிலாக மட்டுமே விசாரிக்கப்படும். 

இந்த விசாரணையின் போது நீதிபதிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வண்ணம் காணொளி இணைப்புகள் சரியான நேரத்தில் வழங்குவதையும் தடையற்ற இணைய சேவையை உறுதி செய்வதையும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை உடனுக்குடன் வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று பதிவாளர் அலுவலகத்துக்கு சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பதிவாளர் அலுவலகத்தின் ஒவ்வொரு பிரிவில் உள்ள பணியாளர்களில் 50 சதவிகிதம் பேர் வாரத்திற்கு அதிகபட்சம் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நீதிமன்ற பணிகள் எவ்வித தடையும் இன்றி நடைபெறுவதை உறுதி செய்ய அலுவலகத்தில் போதுமான பணியாளர்கள் நேரில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்கள் தொலைபேசி மூலம் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் அலுவலகத்திற்கு வர தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களுக்குள் வாகனங்களை பகிர்ந்து பயணிக்கும் முறையை ஊக்குவிக்கவும் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share