விபி -ஜி ராம் ஜி திட்டம் தமிழகத்தில் நாளை (ஜூலை 1)முதல் அமலுக்கு வருகிறது.
“2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய பயணத்தில், கிராமப்புற மேம்பாட்டு கட்டமைப்பை மறுசீரமைக்க “வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் (கிராமங்கள்) உத்தரவாதச் சட்டம், 2025 (விபி -ஜி ராம் ஜி)” கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டம் ஜூலை 1, 2026 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் 2005-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதிச் சட்டம் திரும்பப் பெறப்படுகிறது” என்று மத்திய அரசு தெரிவித்தது.
ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் வழங்கப்பட்டு வந்த 100 நாட்கள் வேலை உத்தரவாதம் இந்த புதிய சட்டத்தின் கீழ் தற்போது 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு இத்திட்டத்திற்காக 2026-27 நிதியாண்டில் ரூ 95,692.31 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலங்களின் பங்கையும் சேர்த்தால் மொத்தத் திட்ட மதிப்பு ரூ 1.51 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஊரக வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்குவதற்கு திமுக எதிர்ப்புத் தெரிவித்தது.
தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், விபி -ஜி ராம் ஜி பெயரை புதிய அரசு ஏற்றுள்ளது.
அதன்படி விபி -ஜி ராம் ஜி திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
