தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர்கள் சிறப்பு தீவிர திருத்தத்தில் குளறுபடிகள் இருப்பதாகவும் இதில் நீதிமன்றம் உடனே தலையிட வேண்டும் என்றும் 23 அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்துக்கு கடிதம் அனுப்பியுள்ளன.
கடந்த ஜூன் 8ம் தேதி இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுத்த முடிவை தொடர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில், இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ளாத திமுக மற்றும் ஆம் ஆத்மி போன்ற கட்சிகளும் கையெழுத்திட்டுள்ளன.
வாக்காளர்கள் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை பற்றி நான்கு பக்கங்கள் கொண்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுவதற்காக இந்த சிறப்பு தீவிர திருத்த முறையை தவறாக பயன்படுத்துகிறது என்று அந்த கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
”இந்திய ஜனநாயகம் நீதித்துறையை தான் நம்பி இருக்கிறது. அதனால்தான் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை எப்படி தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான குறிப்பிட்ட சில மாநிலங்களின் ஆதாரங்களையும் உதாரணங்களையும் எங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
எங்கள் கடிதத்தின் முக்கிய நோக்கம் எஸ்ஐஆர் பற்றியது என்றாலும் தேர்தலின் போது நடக்கும் பிற முறைகேடுகள் குறித்தும் வெவ்வேறு மாநிலங்களில் நடந்த சம்பவங்களை உதாரணங்களாக காட்டி இதில் குறிப்பிட்டுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி ஜெயராம் ரமேஷ் கூறுகையில், கடந்த ஜூன் 8-ம் தேதி நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் 21 அரசியல் கட்சிகளும் ஒரு சுயாட்சி உறுப்பினரும் கலந்து கொண்டனர். அப்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்த முறை மற்றும் அது தொடர்பான பிற பிரச்சனைகள் குறித்து தலைமை நீதிபதிக்கு கூட்டு கடிதம் அனுப்ப முடிவெடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
