இந்தியாவில் தனியாரால் உருவாக்கப்பட்ட முதலாவது ராக்கெட்டான விக்ரம்-1 ஐ, ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி நிலை நிறுத்தி உள்ளது.
விக்ரம்-1 என்பது ஒரு ‘மல்டி-ஸ்டேஜ்’ (Multi-stage) ராக்கெட் ஆகும். இது திட எரிபொருள் (Solid propulsion) மூலம் இயங்கக்கூடியது. இது குறைந்த எடையுள்ள செயற்கைக்கோள்களை (Small satellites) புவி தாழ்வட்டப் பாதையில் (Low Earth Orbit – LEO) நிலைநிறுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இந்த ராக்கெட் தயாரிப்பில், நவீன 3டி பிரிண்டிங் (3D printing) தொழில்நுட்பம் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ராக்கெட்டின் பாகங்களை மிகக் குறைந்த எடையுடனும், அதே சமயம் அதிக வலிமையுடனும் உருவாக்க உதவுகிறது.
இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் விக்ரம் சாராபாய்க்கு மரியாதை செலுத்தும் விதமாகவே, ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தனது ராக்கெட்டுகளுக்கு ‘விக்ரம்’ எனப் பெயரிட்டுள்ளது.
இந்த முதல் ஏவுதல் மூலம், குறைந்த செலவில் விண்வெளிப் பயணங்களை மேற்கொள்வதையும், உலகளாவிய சிறிய செயற்கைக்கோள் சந்தையில் இந்தியாவின் பங்கை அதிகரிப்பதையுமே ஸ்கைரூட் நிறுவனம் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விக்ரம்-1 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
மத்திய அரசின் விண்வெளி கொள்கை
இந்திய விண்வெளிக் கொள்கை 2023, விண்வெளிச் சூழல் அமைப்பு முழுவதும் புதுமை, முதலீடு மற்றும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், முழு விண்வெளி மதிப்புச் சங்கிலியையும் தனியார் பங்கேற்புக்கு அனுமதித்துள்ளது. இதனடிப்படையில்தான் இன்றைய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்திய தொழில்துறை இப்போது செயற்கைக்கோள் தயாரிப்பு, ஏவுதள சேவைகள், விண்வெளி பயன்பாடுகள் மற்றும் கீழ்நிலை சேவைகளில் பங்கேற்கிறது.
இந்த சீர்திருத்தங்களின் தாக்கம் ஏற்கனவே வெளிப்படையாக தெரிய ஆரம்பித்துள்ளது. இந்தியாவின் விண்வெளி புத்தொழில் சூழல் அமைப்பு 2014-ல் தொடங்கி, 2026-ல் 400-க்கும் அதிகம் என்ற அளவில் வளர்ந்துள்ளது, இது விண்வெளித் துறையில் தனியார் பங்கேற்பு மற்றும் கண்டுபிடிப்புகளின் விரைவான விரிவாக்கத்தைப் பிரதிபலிக்கிறது.
அரசின் சீர்திருத்தங்களும் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றன. இன்று தோராயமாக 8.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தத் துறையானது, 2030-ம் ஆண்டுக்குள் ஐந்து மடங்கு வளர்ச்சியடைந்து, 40-45 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2040-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது. நிலையான அரசு ஆதரவு, விதிமுறைகளை செயல்படுத்துதல் மற்றும் வலுவான பொது-தனியார் கூட்டாண்மைகள் இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து மேம்படுத்துகின்றன.
இந்திய விண்வெளிக் கொள்கை 2023-ஐ மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, அரசு சாரா நிறுவனங்களை முழு விண்வெளி மதிப்புச் சங்கிலியிலும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை இந்தியாவில் விண்வெளி தொடர்பான செயல்பாடுகளுக்கு தனியார் நிறுவனங்களுக்கு கதவுகளைத் திறந்தது. இந்தத் துறையில் புதிய யோசனைகள் மற்றும் முன்னேற்றங்களை ஊக்குவித்தல், தொழில்நுட்பத்தில் புதுமைகளை உருவாக்குவதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனுடன், இந்தக் கொள்கையானது சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது, விண்வெளியில் அமைதியான ஆய்வுகளை ஆதரிக்கும் கூட்டாண்மைகளை வளர்க்கிறது. ஒட்டுமொத்தமாக, இந்த நடவடிக்கைகள் இந்தியாவில் மிகவும் வெளிப்படையான மற்றும் உள்ளடக்கிய விண்வெளி சூழல் அமைப்பை நோக்கிய குறிப்பிடத்தக்க மாற்றத்தைப் பிரதிபலிக்கின்றன.
இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (இன்-ஸ்பேஸ்) அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களால் விண்வெளி நடவடிக்கைகளை அங்கீகரிக்கவும் ஊக்குவிக்கவும் ஒரு தன்னாட்சி ஒற்றை சாளர நிறுவனமாக செயல்படுகிறது. இந்திய விண்வெளிக் கொள்கை 2023 மூலம் பலப்படுத்தப்பட்ட, இந்த மையம் ஒரு நிலையான மற்றும் யூகிக்கக்கூடிய ஒழுங்குமுறை கட்டமைப்பை வழங்குகிறது. கூடுதலாக, இது இஸ்ரோவின் வசதிகள், தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்திற்கான அணுகலை செயல்படுத்துகிறது. மேலும், வெளிப்படையான வழிகாட்டுதல்கள் மூலம் ஒப்புதல்களை ஒழுங்குபடுத்துகிறது.
ஜூன் 2026 நிலவரப்படி, 4,500 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இன்-ஸ்பேஸ் பதிவுசெய்துள்ளது, 133 அங்கீகாரங்களை வழங்கியதுடன், 106 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
இந்திய விண்வெளிக் கொள்கை 2023 இஸ்ரோவின் வணிகப் பிரிவாக நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் (என்எஸ்ஐஎல்) பங்கை வரையறுத்துள்ளது. இது, வணிகக் கொள்கைகளின் அடிப்படையில் விண்வெளி அமைப்புகளை தயாரித்து வாங்குகிறது. இது அரசு நிறுவனங்கள், அரசுசாரா நிறுவனங்கள் ஆகிய இரண்டிற்கும் அனைத்து விண்வெளி தீர்வுகளை வழங்குகிறது. பிஎஸ்எல்வி உற்பத்தி மற்றும் சிறிய செயற்கைக்கோள் தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் தனியார் பங்கேற்பை இது மேலும் விரிவுபடுத்துகிறது.
பல ஆண்டுகளாக, நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் வருவாயில் பத்து மடங்கு அதிகரிப்பைக் கண்டுள்ளது, இது உலகளாவிய விண்வெளித் துறையில் அதன் விரிவடைந்து வரும் வணிகத் தடத்தை பிரதிபலிக்கிறது.
மோடி வாழ்த்து
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1 சுற்றுவட்டப் பாதையில் ஏவப்பட்டுள்ள நிலையில் அதை உருவாக்கிய ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், இது நாட்டின் விண்வெளிப் பயணத்தில் ஒரு வரலாற்று மைல்கல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விக்ரம்-1 செலுத்தப்படுவது, இந்தியாவின் விண்வெளி லட்சியங்களுக்கு ஒரு புதிய எல்லையைத் திறப்பதோடு, புத்தாக்கம், தொழில்நுட்பம், தொழில்முனைவு ஆகியவற்றில் நாட்டின் வளர்ந்து வரும் திறன்களையும் பிரதிபலிக்கிறது என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.
