100 கோடி ரூபாய் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இதையொட்டி இரண்டு தொகுதிகளிலும் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் முன்னுக்குப் பின் முரணாக தகவல்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக திருத்தப்பட்ட வேட்பு மனுவை பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்தார் விஜய்.
இந்த நிலையில் வியாசர்பாடியை சேர்ந்த பெரம்பூர் வாக்காளரான விக்னேஷ், விஜய் தனது வேட்பு மனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியுள்ளார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், “பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு 115 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் என்று குறிப்பிட்டு இருந்த விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் 220 கோடியே 15 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் என குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிட்ட சொத்து மதிப்பை விட பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறைவாக காட்டியது உண்மை தகவலை மறைத்ததற்கு சமம். எனவே விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் தெரிவித்துள்ள சொத்து விவரங்கள் உண்மையானவயா என விசாரிக்க வருமானவரித் துறைக்கும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தவர் ஒரு தொகுதியில் 100 கோடி ரூபாய் வரை சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக பதில் அளக்கும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
