விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை முதல்வர் விஜய் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்த பிறகு, முதல்வர் விஜய் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் இன்று மாலை விசிக தலைவர் திருமாவளவனை வேளச்சேரியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.
தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த பிறகு முதல் முறையாக திருமாவளவனும் விஜயும் சந்தித்துக் கொண்டனர்.
வாசலில் நின்று விஜய்யை அழைத்துச் சென்ற திருமாவளவன் மற்றும் விசிக எம்எல்ஏக்கள் வன்னியரசு, சிந்தனை செல்வன் ஆகியோர் மலர் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
திருமாவளவன் விஜய்க்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை அன்பளிப்பாக வழங்கினார்.
விஜய் வந்து சென்ற பிறகு திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினையும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையும் இல்லத்திற்கே சென்று சந்தித்ததை ஒரு புதிய வரலாறு என்று கூறி விஜய்யை பாராட்டினோம்
அதே போல தனக்கு ஆதரவளித்த காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களை அவர்கள் இல்லத்திற்கே நேரில் வந்து சந்தித்தது, தமிழக அரசியலில் அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களையும் சந்திக்க வேண்டும் என்ற எங்களில் விருப்பத்தை தெரிவித்தோம். இதற்கு அவரும் சந்திப்பதாக கூறியிருக்கிறார்.
பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவைக் கோராமல், திமுக அணியில் இடம்பெற்றிருந்த மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவைக் கோரியதையே விஜய் அவர்கள் மதச்சார்பின்மையில் கொண்டுள்ள நம்பிக்கையாகப் பார்க்கிறோம். .
நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த அரசு வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம்.
அதிமுகவில் இருந்து ஒரு குழுவாகப் பிரிந்து ஆதரவு தெரிவிப்பவர்களின் வாக்குகள் செல்லுமா என்பது குறித்து சட்டப்பேரவைத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும்” என்று கூறினார்.
